வாழ்வாதாரம் இழந்த முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கு உலர் உணவு

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19 வைரஸ் நிலைமை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாழ்வாதாரம் இழந்த முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் அவர்களின் ஒழுங்குபடுத்தல் மூலம் கனடா வாழ் உறவுகளின் கல்வி கனெக்ஸன் எனும் அமைப்பின் நிதிப் பங்களிப்பில் ஜனநாயகப் போராளிகள் கட்சியினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கும் செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் அவர்களினால் ஏற்பாடு மேற்கொள்ளப்பட்ட மேற்படி செயற்திட்டம் இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெற்றது.
 
மாவட்டத்தில் மண்முனை தென்எருவில்பற்று, போரதீவுப்பற்று, மண்முனை மேற்கு, ஏறாவூர்ப்பற்று, கோரளைப்பற்று வடக்கு, மண்முனை மெற்கு போன்ற பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள சுமார் 200க்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகள் குடும்பங்களுக்கு சுமார் 2500 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts