விஜயகலாவை மறைமுகமாக கிண்டலடித்து சிங்களவர்களை எச்சரித்த ஞானசார

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு, பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தன் இனத்திற்காக துணிச்சலாக சர்ச்சைக்குரிய கருத்தை விஜயகலா வெளியிட்டுள்ளதாக தேரர் குறிப்பிட்டுள்ளார்.

கன்ததெகட்டிய விகாரையில் இடம்பெற்ற ஸ்ரீ தர்மாராம விகாரையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த 70 வருடங்களாக நாட்டில் உருவான அனைத்து தலைவர்களும் தம்மை பலவீனப்படுத்தினர். இலங்கைக்கு பொருத்தமான தலைவர் ஒருவர் உருவாகவில்லை.

விடுதலைப் புலிகள் அமைப்பு மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும் என பாரிய சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்ட விஜயகலா மகேஸ்வரன் தொடர்பில் தான் பெருமை அடைகிறேன். விஜயகலா தனது இனத்திற்காக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அந்த பெண் தனது இனத்திற்காக முன்நிற்கின்றார். அரசியல்வாதிகள் எங்களை பலவீனப்படுத்துவதை மாத்திரமே செய்தனர். பிரிவினை ஏற்படுத்தினார்கள். இலங்கையை ஆட்சி செய்த ஆட்சியாளர்கள் எங்களை பலவீனப்படுத்தினார்கள். எனினும் விஜயகலா மகேஸ்வரன் குறித்து பெருமைப்படுகிறேன்.

தான் சிறை வைக்கப்பட்ட பின்னர் இந்த நாட்டின் பல்வேறு பிரதேசங்களின் பிக்குகள், பௌத்த மக்கள் எதிர்ப்பு வெளியிட்டனர். என்னை விடுவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டனர். பௌத்த புத்திரனாக எங்கள் இனம் மற்றும் மதத்தை காப்பாற்ற நாம் முயற்சிக்கின்றோம். எங்களுக்கு சாப்பிடுவதற்கு வாய், வயிறு உள்ளது போன்று, நாடு ஒன்று இருக்க வேண்டும்.

தங்கள் இனத்தை குறித்து நினைத்தே பிரபாகரன் ஆயுதத்தை கையில் எடுத்தார். இந்த நாட்டில் உள்ள தலைவர்களின் செயற்பாடு காரணமாக விஜயகலா போன்ற பெண்கள் எங்கள் தலைவர்களின் தோள்பட்டையிலும் ஏறுவார்கள். நாம் தியாகம் செய்ய வேண்டும். எங்கள் பிள்ளைகளுக்காக எங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts