11ஆசனங்களை தன்வசம் வைத்துக் கொண்ட தமிழ்தேசிய கூட்டமைப்பானது 7 ஆசனங்களை வைத்திருந்த முஸ்லிம் காங்கிரசுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியையும்,கிழக்கு மாகாண சபையையும் தாரைவார்த்து கொடுத்தார்களோ அன்றிலிருந்த ஒட்டுமொத்த தமிழர்கள் பாதிப்பை எதிர் நோக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.


கடந்த மாகாணசபைத் தேர்தலின்போது 11 ஆசனங்களை தன்வசம் வைத்துக் கொண்ட தமிழ்தேசிய கூட்டமைப்பானது 7 ஆசனங்களை வைத்திருந்த முஸ்லிம் காங்கிரசுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியையும்,கிழக்கு மாகாண சபையையும் தாரைவார்த்து கொடுத்தார்களோ அன்றிலிருந்த ஒட்டுமொத்த தமிழர்கள் பாதிப்பை எதிர் நோக்கிக் கொண்டிருக்கின்றார்கள் என தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச் செயலாளரும்,முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

“கிழக்கை மீட்போம்”எனும் தொனிப்பொருளில் “2018 ஆம் ஆண்டு கம்பெரலிய திட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்புத் தொகுதியை ஆட்சியாளர்கள் ஏமாற்றுவதனை அனுமதிக்க முடியாது…?” என்ற துண்டுப் பிரசுரங்களை மக்களுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (10) காலை களுவாஞ்சிகுடி பொதுச் சந்தைப் பகுதியில் இடம்பெற்றது.

இதன்போது அப்பகுதியிலுள்ள மக்களுக்கு இத்துண்டு பிரசுரங்களை வழங்கி வைத்து விட்டு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இதன்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் மாநகரசபை,பிரதேச சபை,நகரசபை உறுப்பினர்கள், கட்சியின் ஏனைய உறுப்பினர்கள்,உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது மேலும் கருத்துத்  தெரிவித்த அவர்…

கடந்த வருடம் ஒதுக்கீடு செய்த கம்பெரலிய வேலைத்திட்டத்திற்கு ஒட்டுமொத்த பட்டிருப்புத் தொகுதி மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.ஆளும் அரசுக்கு ஆதரவு வழங்குகின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்கூட கருத்திலெடுக்காமை வேதனைக்குரியதாக இருக்கின்றது.

தொகுதிக்கு 200 மில்லியன் ரூபாவை கடந்த வருடம் அரசு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தபோதும், ஒட்டுமொத்த பட்டிருப்புத் தொகுதிக்கு 25 வேலைத்திட்டங்களுக்காக 28.5 மில்லியன் ரூபாக்களே ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளன. மிகுதியான 171.5 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்படாமல் அது ஏனைய தொகுதிகளுக்கும்,ஏனைய சமூகத்திற்கும் வேதனையைத் தருகின்றது.

கடந்த யுத்தத்தினால் பாதிப்புற்று வறுமையில்,பொருளாதரத்திலும் அடிமட்டத்தில் இருக்கின்ற பட்டிப்பளைப்பிரதேசம், போரதீவுப்பற்றுப் பிரதேசம், மண்முனை தென் எருவில் பற்றுப்பிரதேசம், ஆகிய வற்றுக்கு வெறும் 28.5 மில்லியன் மாத்திரம் ஒதுக்கீடு செய்திருப்பதானது, தனித் தமிழ் தொகுதியாக இருக்கின்ற பட்டிருப்புத் தொகுதியை உதாசீனம் செய்வதாகத்தான் இருக்கின்றது.இதனை மக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டியது பொறுப்பு மிக்க அரசியல் கட்சி என்ற ரீதியில் நாம் இதனை முன்னெடுத்து வருகின்றோம்.

2019 ஆம் ஆண்டும் இந்த கம்பெரலிய திட்டத்தினூடாக பட்டிருப்புத்  தொகுதிக்கு 300 மில்லியன் ரூபாவும் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அமைச்சரவைத் தீர்மானம் இருக்கின்றது.ஆனால் அதுவும் தற்போதுவரை அதில் 81 வேலைத்திட்டங்களுக்கு, 61.5 மில்லியன் ரூபாய நிதியே கிடைக்கப் பெற்றுள்ளன.

மட்டக்களப்புத் தொகுதிக்கு 141 வேலைகளுக்கு 105.4 மில்லியனும், கல்குடா தொகுதிக்கு 167 வேலைத்திட்டங்களுக்கு 181.1 மில்லியனும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.அதில் வேடிக்கையான விடயம் என்னவெனில் மண்முனை  தென் எருவில் பற்றுப் பிரதேசத்திற்கு 24 மில்லியனும், போரதீவுப்பற்றுப் பிரதேசத்திற்கு 15.6 மில்லியனும்,பட்டிப்பளைப் பிரதேசத்திற்கு 21.9 மில்லியனுமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.இந்நிலையில் ஓட்டமாவடி பிரதேசத்திற்கு 54 மில்லியனும், கோறளைப்பற்று மத்தியப்பிரதேசத்திற்கு 56.5 மில்லியனும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

பிரதேச செயலாளர்கள், மற்றும் மாவட்ட செயலாளர் ஊடாகத்தான் இந்த கம்பெரலியத்திட்டங்கள் தெரிவு செய்யப்பட வேண்டும். பொதுமக்களுடன் கலந்துரையாடாமல் தேர்தலை இலக்காக கொண்டு ஆளும் கட்சிக்கு முட்டுக் கொடுக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் இந்நிதி ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.அவர்களும் மக்களுடன் கலந்துரையாடாமல், அவர்களின் ஆதரவாளர்களுக்கும். அவர்களுக்கு வாக்களித்தவர்களுக்கும், அவர்களின் முகவர்களுக்கும் பயன்படுத்தும் செயற்றிட்டங்களுக்குமாக இந்நிதியை பயன்படுத்தி வருகின்றார்கள்.உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுடன் கலந்துரையாடியே இந்நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.இதன்மூலம் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ்மக்கள் நில,நிருவாக ரீதியில் பல அசௌகரியங்களை எதிர் கொண்டு வருகின்றார்கள்.

தொகுதிக்கு 300 மில்லியன் என்று பார்த்தால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 900 மில்லியன் நிதி கிடைக்க வேண்டும்.இது பெரியதொரு நிதி ஒதுக்கீடாகும். இதனை வைத்துக் கொண்டு மக்களுக்கான செயற்பாடுகள் நிறைவேற்றப்படாமல். அரசியலுக்கான திட்டங்களே நிறைவேற்றப்பட்டு வருகின்றன.அதிலும் பட்டிருப்புத் தொகுதி புறபக்கணிக்கப்படுவதும், இத்தொகுதிக்கு கடந்த வருடம் வரவேண்டிய 171.5 மில்லியன் நிதி கிடைக்காமை வேதனைக்குரியதாகும். இதனை மக்களுக்கு தொடர்ந்து தெளிவுபடுத்தி வெளியில் கொண்டு வருவதற்கு நாங்களும் தயாராக இருக்கின்றோம்.

கிழக்கை பொருளாதாரரீதியாக, நிலரீதியாக, கல்விரீதியாக, கலாசாரரீதியாக உள்ளிட்ட அனைத்து ரீதியாகவும் நாம் மீட்க வேண்டியுள்ளது.கடந்த மாகாணசபைத் தேர்தலின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு 11 ஆசனங்களை வைத்துக் கொண்டு 7 ஆசனங்களை வைத்திருந்த முஸ்லிம் காங்கிரசுக்கு முதலமைச்சர் பதவியையும், கிழக்கு மாகாண சபையையும் கொடுத்தார்களோ அன்றிலிருந்த ஒட்டுமொத்த தமிழர்கள் பாதிப்பை எதிர் நோக்கிக் கொண்டிருக்கின்றார்கள்.இதனால் கிழக்குமாகாணம் இன்று புற்றுநோய்போன்று தமிழர்களை அழித்துக்கொண்டிருக்கின்றது.இதனை கிழக்கு மாகாண தமிழ்த்தலைமைகள் வேடிக்கை பார்க்கின்றது.

கிழக்கு தமிழ்மக்களை காப்பாற்றுவதற்கு அன்று ஆயுதம் தூக்கி போராடிய அண்ணன் சிவநேசதுரை-சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் கிழக்குத் தமிழர்களையும்,தமிழ்மக்களின் நில,நிருவாக,வேலைவாய்ப்பு,பொருளாதாரச்சுரண்டலையும் பாதுகாப்பதில் தொடர்ச்சியாக போராடுகின்றது.நல்லாட்சிக்கு முட்டுக்கொடுக்கின்ற தமிழ்தலைமைகள் வாயில் கையை வைத்து வாய்மூடி மௌனிகளாக செயற்படுகின்றது.கிழக்கையும்,கிழக்குத்தமிழர்களையும் பாதுகாப்பதற்கு தமிழ்மக்கள் விடுதலைப்புலிகள் கட்சினர் தொடர்ச்சியாக போராடிக்கொண்டிருக்கும் என அவர் தெரிவித்தார்.

Related posts