175 மில்லியன் ரூபாய் செலவில் இந்த துறைமுகம் புனரமைப்பு செய்யப்படுகின்றது

பருத்தித்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதோடு நின்றுவிடாமல் எமது மீனவா்களே அதனை பயன்படுத்தும் வகையில் படகுகள் பயிற்சிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைத்துள்ளாா்.

பருத்தித்துறை துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகள்  (வெள்ளிக்கிழமை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் தொடங்கி வைக்கப்பட்டது.

இதன்போது அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவா் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.  சுமந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, “இந்த துறைமுக அபிவிருத்தி பணிகள் தொடங்கப்பட்ட காலத்தில் பல்வேறு குழப்பங்கள் காணப்பட்டன. அவை குறித்து பல தடவைகள்  பேச்சுவார்த்தைகளில் நாம் ஈடுபட்டோம்.

இன்று இந்த துறைமுகம் எந்த குழப்பமும் இல்லாமல் மக்களுடைய விருப்பத்துடன் அபிவிருத்தி செய்யப்படுவதையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். இறுதி நேரத்தில் எழுந்த குழப்பங்களை தீா்த்துவைத்த ஆளுநருக்கும்  நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.

சுமாா் 175 மில்லியன் ரூபாய் செலவில் இந்த துறைமுகம் புனரமைப்பு செய்யப்படுகின்றது. முதல்கட்டமாக 80 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகள் தொடங்கப்படவுள்ளது. மிக பெருமளவு முதலீட்டின் ஊடாக மேற்கொள்ளப்படும் இந்த திட்டம் எமது பருத்தித்துறை மக்களுக்கும், மீனவா்களுக்கும் பயனுள்ள ஒன்றாக அமையும்.

சரித்திர காலம் தொடக்கம் இந்த துறைமுகம் ஒரு வியாபார துறைமுகமாக இருந்து வந்துள்ளது. இங்கே சுங்க அலுவலகங்கள் இயங்கிய கட்டடங்களை இப்போதும் காணலாம்.

மேலும் பருத்தி ஏற்றுமதியில் முக்கிய இடத்தை கொண்டிருந்தமையே இந்த ஊருக்கு பருத்தித்துறை என பெயா் வரக் காரணமாகும்.

ஆகவே, இப்போது அபிவிருத்தி செய்யப்படும் இந்த துறைமுகம் எங்களுடைய மக்களால் பூரணமாக பயன்படுத்தப்பட வேண்டும். இங்குள்ள மீனவா்களை காட்டிலும் இந்த துறைமுகத்தினால் வெளிமாவட்டங்களை சோ்ந்த மீனவா்கள் நன்மையடைவாா்களோ? என்ற அச்சம் மீனவா்களிடம் இப்போதும் இருந்துகொண்டிருக்கின்றது.

ஆனால் எமது பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தியை எமது மீனவா்கள் அனுபவிக்கவேண்டும்.

Related posts