2015 இல் பெற்ற ஜனநாயக வெற்றி காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது – முன்னாள் ஜனாதிபதி கவலை!

2015 ஆம் ஆண்டு பலரின் இணைவால் பெற்ற ஜனநாயக வெற்றி தற்போது காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கவலை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் இந்நிலைமையானது நாட்டை அதளபாதளதிற்கு கொண்டு செல்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் இன்று (வியாழக்கிழமை) அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி இவ்விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஒழுக்கமான நேர்மையான வளமிக்க இலங்கைக்கான போராட்டத்திற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஏனைய கட்சிகள், சிவில் சமூகத்துடன் இணைந்து முன்னொருபோதும் இல்லாத பாரிய இயக்கத்தை கட்டியெழுப்பியது என அவர் தெரிவித்துள்ளார்.

2015 இல் வெற்றி பெற்ற சிறந்த இலங்கைக்கான மக்களின் வேண்டுகோளிற்கு துரோகமிழைப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை சேர்ந்த  சிலர் முயல்வதும் எங்கள் அடிப்படை உரிமையை, ஜனநாயகத்தை பறித்த, ஜனநாயக ஸ்தாபனங்களை அழித்து ஊழல் இலஞ்ச வலையமைப்பை உருவாக்கிய கட்சியுடன் அரசியல் குழுவுடன் இணைய முயல்வதும் கவலையடைய செய்கின்றது.

நாடாளுமன்றத்திற்குள்ளேயும் வெளியேயும் கடந்த சில வாரங்களாக இடம்பெறுகின்ற காட்சிகள் அனைத்து இலங்கையர்களாலும் மிக நீண்ட காலமாக மிகப்பெறுமதி வாய்ந்தவையாக கருதப்பட்ட பாதுகாக்கப்பட்ட ஜனநாயக அமைப்புகள் மீதான மக்களின் நம்பிக்கையை அழித்து வருகின்றன.

ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் மிகவும் பெறுமதியான விடயங்களாக கருதும் இலங்கையர்களும் அதனை நிலைநாட்டும் அமைப்புகளும் இந்த நாட்டில் சுதந்திரத்திற்காகவும் நல்லாட்சிக்காவும் எழுச்சி பெற வேண்டிய முன்னெப்போதும் இல்லாத தருணம் தற்போது வந்துள்ளது.

இலங்கை முன்னொருபோதும் இல்லாத ஆபத்தான குழப்பம், நாட்டை அதளபாதளதிற்கு கொண்டு செல்கின்றது” என சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

Related posts