2020ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

காரைதீவு பிரதேசசபையின் 2020ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
 
சபையின் 21ஆவது மாதாந்த அமர்வு (25) திங்கட்கிழமை சபை தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் சபாமண்டபத்தில் நடைபெற்றது.
முன்னதாக வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிப்பதற்காக வெளியில் தேசிய மாகாண சபைக்கொடிகள் ஏற்றப்பட்டன.
 
பின்னர் சபைக்கூட்டத்தின்போது 2020க்கான வரவுசெலவுத்திட்டம் தொடர்பாக உறுப்பினர்கள் அனைவருக்கும் உரையாற்ற தவிசாளர் நேரம்வழங்கினார். அதற்கிணங்க சபையிலுள்ள 11 உறுப்பினர்களும் வரவுசெலவுத்திட்டத்திற்கு ஆதரவாக உரையாற்றினர். இறுதியில் தவிசாளரும் உரையாற்றி ஏகமனதாக நிறைவேற்றினர்.
 
வாக்கெடுப்பின்றியே அனைவரதும் ஏகோபித்த ஆதரவைத் தெரிவித்து வரவுசெலவுத்திட்டத்தை நிறைவேற்றியதற்கு தவிசாளர் தனது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்ததோடு நாம் 7கட்சிகளைச் சார்ந்தவர்களாக இருந்தபோதிலும் ஒரு கட்சியாக மக்களுக்காக செயற்பட்டிருப்புத கண்டு பெருமிதமடைகிறேன். என்றார்.
 
தவிசாளர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களும் புதிய ஜனாதிபதி புதிய பிரதமருக்கு தமது பேச்சில் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அத்துடன் இவர்களுக்கு சிறுபான்மையினத்தவரின் வாக்குகள்தான் முதல்சுற்றில் ஜனாதிபதி தெரிவாகக்காரணம் என்பதையும் கூறி இவர்கள் சிறுபான்மையினத்தவரையும் அரவணைத்து இனமத பேதமின்றி ஆட்சி செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
 
மேலும் மாவடிப்பள்ளியில் ஏலவே மடுவம் இருந்த இடத்தில் இறைச்சிக்கடை கட்டுவதற்கு தற்சமயம் விலைமனுக்கோரப்பட்டிருப்பதனால் கடை கட்டுவது தொடர்பில் சபையில் ஏலவே நிறைவேற்றப்பட்ட பிரேரணையை மறுபரிசீலனை செய்யுமாறு விசேடபிரேரணையை உறுப்பினர் எம்.ஜலீல் கொண்டுவந்தார் அதுதொடர்பாக வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
 
இறுதியில்பகிரங்க வாக்கெடுப்பின்போது கடைகட்டப்படவேண்டும் என்பதற்கு ஆதரவாக 7வாக்குகளும் எதிராக 5வாக்குகளும் அளிக்கப்பட்டன. 
 
காரைதீவு 30 தமிழ்மக்களுக்கு இலவசமாக குழாய்நீர்விநியோகத்திற்கு உதவிசெய்த அ.இ.ம.காங்கிரஸ் உறுப்பினர் மு.ஜலீலுக்கு தமிழ் உறுப்பினர்கள் நன்றி தெரிவித்துப்பேசினர்.

Related posts