60வருடமாக தமிழர்களை ஏமாற்றியவர்கள் இன்று அரசாங்கத்தினை விமர்சிப்பதை மட்டுமே வழக்கத்தில் கொண்டுள்ளனர்

60வருடமாக தமிழர்களை ஏமாற்றியவர்கள் இன்று அரசாங்கத்தினை விமர்சிப்பதை மட்டுமே வழக்கத்தில் கொண்டுள்ளதாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்தார்.

சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராமிய விளையாட்டு மைதானங்களை புனரமைக்கும் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட விளையாட்டு மைதானங்களை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு வியாழக்கிழமை(23)மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது.

இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ பிரதம அதிதியாக கலந்துகொண்டு இந்த விளையாட்டு மைதானங்களை கையளித்தார்.இதன்கீழ் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு  பொது விளையாட்டு மைதானம் புனரமைக்கப்பட்டு இன்று கையளிக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் கோரிக்கைக்கு அமைவாக விளையாட்டுத்துறை அமைச்சினால் சுமார் 15இலட்சம் ரூபா செலவில் இந்த விளையாட்டு மைதானம் புனரமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்,தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன், பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ப.சந்திரகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர்,
மக்கள் எதனை எதிர்பார்க்கின்றார்களோ அதனை தாங்களாக உணர்ந்து செய்கின்ற தலைமைத்துவத்தினை இந்த நாடு பெற்றிருக்கின்றது.இதனை விமர்சிப்பவர்கள் விமர்சித்துக்கொண்டே இருக்கட்டும்.62வருடங்களாக விமர்சித்தோம் என்ன நடந்தது?.இன்னும் விளையாடுவதற்கு கோட்டைக்கல்லாறில் விளையாட்டு மைதானம் இல்லாமல் இருக்கின்றோம்.

கடந்த காலத்தில் போர்க்களத்தில் போராடிய பல இளைஞர்கள் இன்று தங்களது வாழ்க்கையினை கொண்டு நடாத்துவதற்கு போராடி வருகின்றனர்.அவர்களின் எதிர்காலத்தினை சுபீட்சமாக மாற்றவேண்டும்.இளைஞர்களின் விளையாட்டு திறமையினை வலுப்படுத்தவேண்டும்.

இன்று அடிப்படை வசதிகளற்றுள்ள மக்களின் எதிர்காலத்தினையும், அவர்களின் தேவையினையும், நிறைவேற்றி அவர்களுக்கு சுபூட்சமான எதிர்காலத்தினை ஏற்படுவத்துவதற்காக எதிர்காலத்தில் இந்த நாட்டின் தலைவிதியை தீர்மானிக்ககூடிய,எதிர்காலத்தின் ஜனாதிபதியாக வரக்கூடியவர்.அவர்களின் கரங்களை பலப்படுத்திக்கொண்டு கிழக்கு மாகாணத்தினை வலுப்படுவத்துற்கு எல்லோரும் இணைந்து பாடுபடவேண்டும் எனத்தெரிவித்தார்.

Related posts