அம்பாறை மாவட்ட தமிழ்மக்களை மீட்டெடுத்து அபிலாசைகளை நிறைவேற்றக்கூடியவர் கருணா மட்டுமே.!

அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் த.தே.கூட்டமைப்பில் கடந்தபாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டவருமான குணசேகரம் சங்கர் இன்று(07) செவ்வாய்க்கிழமை கல்முனையில்வைத்து  தமிழர் ஜக்கிய சுதந்திரமுன்னணித்தலைவரும் அகில இலங்கை தமிழர்மகாசபை திகாமடுல்ல மாவட்ட தலைமைவேட்பாளருமாகிய கருணா அம்மான் என அழைக்கப்படும் வினாயகமூர்த்தி முரளிதரனுடன் இணைந்தார்.
 
இது தொடர்பாக எமது ஊடகத்திற்கு முன்னாள் எம்.பி. சங்கர் கருத்துரைத்தார்.
அங்கு சங்கர் முன்னாள் எம்.பி தெரிவிக்கையில்:
 
அம்பாறை மாவட்டத்தில் பிறந்த எனக்கு இங்குள்ள மக்களின் பூர்வீகத்தை நன்கு அறிவேன். நானும் ஒரு போராளியாக இருந்தவன். அம்பாறை மாவட்ட தமிழ்மக்கள் படும் இன்னல்களை துன்பங்களை அறிவேன். பாரிய பாரபட்ங்களையும் புறக்கணிப்புகளையும் சந்தித்தவர்கள். காணிஅபகரிப்புகள் நிலப்பறிப்புகளை இன்றும் சந்திக்கிறார்கள்.
 
இந்தநிலையில் முன்னாள் எம்.பி. எம்.சி.கனகரெட்ணத்திற்குப்பிறகு வந்த த.தே.கூட்டமைப்பு எம்பிக்கள் எந்தவொரு உருப்படியான வேலைகளையும் செய்யவில்லை. மக்களை போலிவாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றியே வந்துள்ளனர். சம்பளத்தை கல்விக்கு வழங்குவேன் என்பார்கள். ஆனால் இதுவரை ஒன்றுமே நடந்ததில்லை.போலித்தேசியம் பேசிக்கொண்டு  எத்தனை நாட்களுக்கு நாம் மக்களை ஏமாற்றமுடியும்.
 
நான் எம்.பியாக இருந்தகாலத்தில் என்னசெய்தேன் என்பதைமக்கள் அறிவார்கள். தொழில்வாய்ப்பாகட்டும் நாவிதன்வெளிபிரதேசசெயலக உருவாக்கமாக இருக்கட்டும் என்னால் முடிந்தவைகளை பலத்த சவாலுக்குமத்தியில் நிறைவேற்றினேன்.
 
பின்னால்வந்தவர்கள் சர்வதேசம் தேசியம் பேசி இன்றுவரை வெறும்வாக்குறுதிகளை வழங்கி கடைசிநேரத்தில் சாராயத்தையும் அரிசியையும் வழங்கி ஏமாற்றலாமென்று நினைக்கின்றனர்.ஆனால் இம்முறை அது நடக்காது.
 
இன்றைய சமகால அம்பாறை மாவட்ட சூழலில் அம்பாறைத் தமிழ்மக்களை மீட்கக்கூடிய ஒரே வல்லமை கருணா அம்மானுக்கு மட்டுமே உள்ளது. மேலும் தமிழ்மக்களின் அபிலாசகைளை வென்றெடுக்கக்கூடிய திராணியும் சக்தியும் அவரிடமேஉள்ளது. அதனால்தான் இன்னுமின்னும் ஏமாற்று அரசியலில் நிற்காமல் யதார்த்த அரசியலில் இணைந்து மக்களுக்காக சேவையாற்ற கருணா அம்மானுடன் இணைந்துள்ளேன்.
 
மாவட்டமெங்கும் கருணா அலை பலமாகவீசுகிறது. எங்குபார்த்தாலும் கருணா அம்மானின் கதைதான். எனவே இம்முறை கருணா வெல்வது நூற்றுக்குநூறு உறுதியாகிவிட்டது. இளைஞர்களும் மக்களும் ஓரணியில் திரண்டுவிட்டார்கள். புத்திஜீவிகளும் கல்விமான்களும் அதேகருத்திலுள்ளனர். இந்த மாற்றம் தமிழ்மக்களின் வளமான எதிர்காலத்திற்கு கட்டியம் கூறுவதாக அமைகிறது. எனவே அம்மானின் வெறறிக்கு வலது கரமாக உழைப்பேன் என்றார்.

Related posts