இடமாற்றம் பெற்றுச் செல்லும் கல்முனை பிரதேச செயலாளரை பாராட்டி கெளரவிப்பு!

நூருல் ஹுதா உமர்

கல்முனை பிரதேச செயலாளராக கடந்த மூன்று வருடங்களாக  கடமையாற்றி தற்பொழுது இடமாற்றம் பெற்று  செல்லும் எம். எம் நஸீர் அவர்களை கல்முனை மக்கள் சார்பாக பாராட்டி கெளரவிக்கும் பிரியாவிடை விருந்துபசார நிகழ்வு கல்முனையன்ஸ் போரத்தின் ஏற்பாட்டில் கல்முனை பீட்ஷா ஹோம் ரெஸ்டூரண்டில்  செவ்வாய்கிழமை (2) நடைபெற்றது.

கடந்த 22-10-2018 தொடக்கம் 01-03-2021 வரை கல்முனை பிரதேச செயலாளராக கடமையாற்றிய எம். எம். நஸீர் அவர்கள் தனது நியமனக் காலத்தில் ஆளுமையாகவும், நேர்த்தியாகவும், நேர்மையாகவும் கரைபடியாக் கரத்தோடு சேவைபுரிந்ததை நிகழ்வில் பங்குபற்றியவர்கள் சுட்டிக்காட்டியதோடு கல்முனையின் இருப்பை உறுதிசெய்யவும், கல்முனையில் அரங்கேறுகிற நிருவாக முறைகேடுகளுக்கு எதிராக துணிச்சலாக செயற்பட்டமையும் குறிப்பிட்டு கல்முனையன்ஸ் போரத்தினால் பொன்னாடை போர்த்தி சேவையைப் பாராட்டி நினைவுச்சின்னம் வழங்கியும் கெளரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில் சிவில் சமூக செயற்பாட்டளர்கள், புத்திஜீவிகள், வர்த்தகர்கள் மற்றும் கல்முனையன்ஸ் போர உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டு இடமாற்றம் பெற்றுச் செல்லும் பிரதேச செயலாளரின் சேவைகளை பாராட்டி கெளரவித்தனர்.

Related posts