இடையூறு விளைவித்தால் சகல பீடங்களும் மீண்டும் மூடப்படும்: பேராதனை பல்கலைக்கழகம்!

பல்கலைக்கழக நிர்வாகத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் மாணவர்களின் செயற்பாடுகள் அமையுமாயின் மீண்டும் பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களும் மூடப்படும் என பேராதனை பல்கலைக்கழக உபவேந்தர் உபுல் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேராதனை பல்கலைக்கழக உபவேந்தர் உபுல் திஸாநாயக்க வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக குறித்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், “பேராதனை பல்கலைக்கழக நிர்வாகத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் நடவடிக்கைகளை மாணவர்கள் தொடர்ந்தும் மேற்கொண்டால் சகல பீடங்களினதும் கற்றல் நடவடிக்கைகள் உடனடியாக கைவிடப்படும்.

அத்துடன் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்துக்கு இடையூறு விளைவிக்கும் சகல மாணவர்கள் மீதும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.

பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம் தவிர்ந்த, அனைத்து பீடங்களும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 13ஆம் திகதி மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீண்டும் கற்றல் நடவடிக்கைகளைக் குழப்பும் வகையில் அல்லது பல்கலைக்கழக நிர்வாகத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்த மாணவர்கள் முற்பட்டால் பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களும் மூடப்படும்” என அவர் மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts