இந்தோனேசியாவில் பயங்கர நிலநடுக்கம் ; பதற்றத்தில் மக்கள்

இந்தோனேசியாவிள் டெர்னட்டே நகரின் அருகே இன்று அதிகாலை 6.6 ரிக்டெர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதால் பீதியடைந்த மக்கள் வீடுகளைவிட்டு ஓட்டம் பிடித்தனர். 

பசிபிக் பெருங்கடல் பகுதியில் புவியியல் அமைப்பின்படி நிலநடுக்கங்களை அடிக்கடி சந்திக்கும் நெருப்பு வளையம் பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றான இந்தோனேசியாவின் வடக்கு மலுக்கு மாகாணத்தில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

டெர்னட்டே நகரில் வடமேற்கே 175 கிலோமீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் 60 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டெர் அளவுகோலில் 6.6 அலகுகளாக பதிவானது.

அப்பகுதியிலுள்ள பல வீடுகள் நிலநடுக்கத்தால் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் உயிர் பயத்தில் தங்களது வீடுகளைவிட்டு ஓட்டம் பிடித்தனர். வீதிகள் மற்றும் திறந்தவெளிகளில் அவர்கள் சில நிமிடங்கள்வரை திரளாக கூடி நின்றனர்.

இன்றையை நிலநடுக்கத்தால் உண்டான சேதம் மற்றும் இழப்புகள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை.

இந்தோனேசியாவின் சுமத்ரா மற்றும் ஜாவா தீவுகளுக்கு இடையில் கடந்த மாதம் எரிமலை வெடிப்பை தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கத்துக்கு 400-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts