இளம் லியோ தலைவர்கள் நால்வருக்கு கௌரவ பிரதமரினால் “சர்வதேச லயன்ஸ் கழக தலைவரினால் வழங்கப்படும் உயர் தலைமைத்துவ விருது”

உலகின் மிகவும் திறமையான இளம் தலைவர்களுக்காக “சர்வதேச லயன்ஸ் கழக தலைவரினால் வழங்கப்படும் உயர் தலைமைத்துவ விருது” பெற்ற லியோ தலைவர்கள் நால்வருக்கு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (30) அலரி மாளிகையில் வைத்து அப்பதக்கங்களை அணிவித்தார்.
 
கொழும்பு றோயல் கல்லூரியின் பிரதி தலைமை மாணவத் தலைவர் மற்றும் றோயல் கல்லூரியின் லியோ கழகத்தின் பினுஜ அமரநாயக்க, கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியின் பிரதி தலைமை மாணவத் தலைவர் மற்றும் லியோ கழக்தின் முன்னாள் தலைவர் தரிந்து ரணவீர, கொழும்பு ஆனந்த கல்லூரியின் லியோ கழகத்தின் முன்னாள் தலைவர் சுனெர லெனரோல் மற்றும் ஹொரய்சன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவ அணித்தலைவர் மற்றும் கொழும்பு நைட்ஸ் லியோ கழகத்தின் முன்னாள் தலைவர் இந்துனில் உதார பலிஹவதன ஆகியோர் இவ்வாறு பதக்கங்களை பெற்றுக் கொண்டனர்.
 
உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் செயற்பாட்டிலுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனமான சர்வதேச லயன்ஸ் கழகத்தினால் உலகில் சிறந்த திறமையை வெளிப்படுத்தும் இளம் தலைவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படும்.
 
வாழ்நாளில் ஒருமுறை மாத்திரம் வழங்கப்படும் இந்த பதக்கம், ஒரு வருடம் என்ற குறுகிய காலத்தில் நான்கு இலங்கையர்களுக்கும் கிடைத்தமை விசேடம்சமாகும்.
 
றோயல் கல்லூரியின் லியோ கழகத்தினால் வெளியிடப்பட்ட லியோ சஞ்சிகை இதன்போது கொழும்பு றோயல் கல்லூரியின் பிரதி தலைமை மாணவத் தலைவர் மற்றும் றோயல் கல்லூரியின் லியோ கழகத்தின் பினுஜ அமரநாயக்கவினால் கௌரவ பிரதமருக்கு வழங்கப்பட்டது.
 
உலகின் முன்னிலையில் இலங்கைக்கு பெற்றுக்கொடுத்த புகழை பாராட்டிய கௌரவ பிரதமர், பதக்கம் வென்ற லியோ தலைவர்களுடன் கலந்துரையாடினார்.
 
குறித்த சந்தர்ப்பத்தில் லியோ கழகத்தின் ஆலோசகர் லசந்த குணவர்தன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts