உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய சஹ்ரான் குழு பயன்படுத்திய மற்றுமொரு வாகனம் மீட்பு

உயிர்த்த ஞாயிறு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்புகாவலில் உள்ள மொஹமட்  ஹணீபா மொஹமட்  அக்கிரம் பயன்படுத்திய மற்றுமொரு வான் ஒன்றினை   வியாழக்கிழமை பிற்பகல்  (22ம் திகதி) மட்டக்களப்பு மாவட்ட குற்றவியல் பிரிவு பொலிசார் மீட்டு காத்தான்குடி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர். 
 
மட்டக்களப்பு மாவட்ட குற்றவியல் பிரிவு  பொலிசார் உயிர்த்த  ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில் உயிர்த்த  ஞாயிறு குண்டுவெடிப்புடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் கடந்த வருடம் ஏப்ரல் 25 ஆம் திகதி காத்தான்குடியில் வைத்து கைது செய்யப்பட்டு மெனராகலை சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள மொஹமட்  ஹணீபா மொஹமட்  அக்ரமின் பெயரில் பயன்படுத்தப்பட்டு மற்றுமொரு வானையே  பொலிஸார்  மீட்டுள்ளனர். 
 
மாவட்ட குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரி. டி.எஸ்.டி. பண்டார தலைமையிலான  பொலிஸ் குழுவினர் அட்டாளைச்சேனை ரிஸ்வி நகர் பகுதியில் குறித்த வானை கொள்வனவு செய்த நபர் ஒருவரிடம் இருந்து  இன்று  மீட்டுள்ளனர்.
 
இந்த வானில்  காத்தான்குடியில் இருந்து நுவரெலியா பயிற்சி முகாமிற்கு பயிற்சிக்காக பயிற்சியாளர்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டதா என்ற சந்தேகத்தின் பேரில் 
குறித்த விசாரணை மேற்கொண்டு  வருவதாக தெரிவித்ததுடன்,  மீட்கப்பட்ட வாகனத்தை   காத்தான்குடி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
 
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு மாவட்ட குற்றவியல் பிரிவு பொலிசார் மேற்கொண்டுவருவதுடன், குறித்த நபரது பெயரிலுள்ள  மற்றுமொரு சிறிய ரக கார் ஒன்றினை   காத்தான்குடி றிஸ்வி நகரில் வாகன தரிப்பிடம் ஒன்றில் கடந்த ஒரு வருடமாக  மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த  16ம் திகதி மட்டக்களப்பு மாவட்ட குற்றவியல் பிரிவு பொலிசார் மீட்டு காத்தான்குடி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts