நிபந்தனையற்ற ஆதரவு பொறருத்தமில்லை : ஐ.தே. கட்சி தமிழ் தரப்பு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது- ஹரீஸ் எம்.பி

நூருள் ஹுதா உமர். 
 
கடந்த நம்பிக்கையில்லா பிரேரணை காலத்தில் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராகிய என்னிடமே பேசாமல் குறித்த அமைச்சரால் கல்முனை உப பிரதேச செயலக கணக்காளரை நியமிக்கப்பட்டது மிகப்பெரிய துரோகம்.  கல்முனை உப பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் தீர்க்கமான முடிவை எடுக்காமல் சாய்ந்தமருது மக்களுக்கான தீர்வை வழங்க முடியாது. என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார். 
 
சமகால அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் பேசிய அவர், 
 
எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதிய ஜனாதிபதி தேர்தலை இலக்காக கொண்டு தமிழ் தரப்பு வைக்கின்ற கோரிக்கைகளுக்கு முஸ்லிங்களாகிய நாம் எந்த விட்டுக்கொடுப்புக்களையும் செய்ய கூடாது என்பதை கடந்த 29ஆம் திகதி தாருசலாமில் நடந்த உயர்பீட கூட்டத்தில் தெளிவாக பேசியுள்ளேன். 
 
மாகாண சபை திருத்தம், முஸ்லிம் திருமண சட்டம்,  புதிய யாப்பு சீர்திருத்தம், மதரஸா கட்டுப்பாடு, விசேடமாக கல்முனை, தோப்பூர், வாழைச்சேனை பிரச்சினைகள் அடங்களாக முஸ்லிங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கோரிக்கைகளாக முன்வைக்கவேண்டிய அவசியத்தை உணரவேண்டியுள்ளது. 
 
கல்முனை விவகாரத்தை புரிந்துணர்வு இல்லாமல் தமிழர்களின் சார்புடைய ஒன்றாக மாற்றி ஒருதலைபட்சமாக செயற்பட்டால் அம்பாறை மாவட்டத்தில் உள்ள சகல மக்களும் கிளர்ந்தெழுந்து கடையடைத்து, உண்ணாவிரதமிருந்து, போராட்டங்களை முன்னெடுப்பர். பின்னர் இது ஒற்றுமையாக வாழும் தமிழ் முஸ்லிம் உறவை சீரழித்து இன கலவரத்தை உண்டாக்கும். 
 
ஐ.தே. கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிபந்தனைகளை இன்றைய மாநாட்டில் நிறைவேற்றும் அளவுக்கு தமிழ் கூட்டமைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது என்றார்

Related posts