ஒருமித்த நாட்டுக்குள் தீர்வை ஏற்றுக்கொள்ள பிரதான தமிழ்க் கட்சி சம்மதம்: பிரதமர் ரணில்!

சுமார் 70 வருடங்களின் பின்னர் பிரதான தமிழ்க் கட்சி ஒருமித்த நாட்டுக்குள் தீர்வை ஏற்றுக்கொள்வதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பலபிட்டியவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

புதிய அரசியல் யாப்பிற்கான சட்டமூலம் கூட இதுவரையில் தயாரிக்கப்படவில்லை எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறினார்.

ஆனால், புதிய அரசியல் யாப்பினூடாக நாடு பிளவுபட போவதாகவும், பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமை இல்லாது போவதாக சிலர் கூறுவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

அரசியல் ரீதியாக வங்குரோத்து அடைந்தவர்களே அவ்வாறான போலியான கருத்துகளை கூறி வருவதாகவும் பிரதமர் கூறியுள்ளார். பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குதல், ஒன்றிணைந்து செயற்படுதல், மற்றும் அதிகாரங்களை பகிர்தளித்தல் ஆகிய விடயங்களில் சகலரும் இணங்கியுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை தொடர்பிலும், தேர்தல் முறைமை சம்பந்தமாகவும் பல கருத்துக்கள் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறினார்.

எனவே இவை உள்ளிட்டவற்றுக்கு இணக்கபாடு எட்டப்பட்டால், அனைவரது ஒத்துழைப்புடன புதிய அரசியல்யாப்பு தொடர்பான சட்ட மூலத்தை தயாரிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய யாப்பில் உள்ள சரத்துக்கு அமைய பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையை அவ்வாறே கடைபிடிக்க அனைவரும் இணங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சுமார் 70 வருடங்களின் பின்னர் பிரதான தமிழ்க் கட்சி ஒருமித்த நாட்டுக்குள் தீர்வை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதிகார பகிர்வு அவர்களின் பிரதான கோரிக்கை ஆவதுடன், சில சிறிய சரத்துகளிலும் அவர்கள் திருத்தங்களை கோரியுள்ளதாகவும் அவர் கூறினார்.

புதிய யாப்பு தொடர்பில் கலந்துரையாட முன்னர், முதலாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை தொடர்பில் பேசுவது முக்கியம் எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

Related posts