ஒரு இனத்தின் இருப்பு நான்கு தூண்களில் தங்கியுள்ளது. பா.அரியநேத்திரன்,மு.பா.உ

ஒரு இனத்தின் இருப்பு நான்கு தூண்ககளில் தங்கியுள்ளது அவை நிலம்,மொழி.பொருண்மியம்,கலாசாரம் இவைகளில் ஒருதூண் இல்லாமல் போனாலும் அல்லது உடைந்தாலும் அந்த இனத்தின் இருப்பு இல்லாமல் போகும் என மட்டக்களப்பு மாவட்ட தமிர்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை தமிழரசு கட்சி தலைவருமான பாக்கியசெல்வம் அரியநேத்திரன் கூறினார்.
அம்பிளாந்துறை வடக்கு ஶ்ரீ ஞானசக்தி சித்திவினாயகர் மாரியம்மன் வருடாந்த மகோற்சவ விழாவை சிறப்பிக்கும் முகமாக அம்பிளாந்துறை நாவலர் கலைக்கழகம் நடத்திய கலை விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது மேலும் கருத்து கூறுகையில்.

ஒவ்வொரு இனத்திற்கும் அந்த இனம் சார்ந்த வாழ்விடமான நிலம், அடையாளப்படுத்தும் தாய் மொழி, அந்த இனத்திற்கான தனித்துவ பாரம்பரியங்களை கொண்ட கலாசாரம்.அந்த இனம் வாழ்வதற்கான பொருளாதாரம் என்பன கட்டாயமாக பேணப்படவேண்டும்.
தமிழ் இனத்தை பொறுத்தவரை வடகிழக்கு தாயகத்தில் வாழும் நாம் எமது இருப்பை உறுதிப்படுத்தி எமது உரிமையை வென்றெடுப்பதற்காக கடந்த எழுபது வருடங்களாக பல்வேறு அரசியல் செயல்பாடுகளை முன்னெடுத்து வருகின்ற ஒரு இனமாக நாம் உள்ளோம்.
எமது இருப்பை அடையாளப்படுத்தும் நிலம் இன்று பல்வேறுபட்ட சக்திகளால் கபளீகரம் செய்யப்பட்டு திட்டமிட்ட குடியேற்றங்களும் காணி அபகரிப்புக்களும் இடம்பெறுவது ஒரு புறமும் எமது கலாசாரத்தை மாற்றும் விதமாக திட்டமிட்ட புத்த விகாரைகளை தான்தோன்றி தனமாக நிறுவும் முயற்சிகளும் இப்போது வடகிழக்கு பகுதிகளில் இடம்பெறுவதை காணமுடிகிறது.
எமது மட்டக்களப்பு மாவட்டத்திலும் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவில் கெவிளாமடு பகுதியில் அண்மையில் அமைச்சர் சஜீத் பிரமதாசாவினால் புதிய விகாரை ஒன்று அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதும் ஒரு திட்டமிட்ட தமிழ் கலாசார விழுமியங்களை இல்லாமல் செய்யும் ஒரு இனவாத செயல் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்
நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போது கடந்த 2012ம் ஆண்டு கெவிளியாமடு தாந்தாமலை போன்ற இடங்களில் புத்த சிலை அமைப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டபொது நேரடியாக அந்த இடத்தில் சென்று அதனை தடுத்து நிறுத்தினேன் இதனால் பல எச்சரிக்கைகள் எனக்கு விடுக்கப்பட்டபோதும் அதனை நான் பொருட்படுத்தவில்லை ஆனால் எக்காரணம் கொண்டும் விகாரையோ புத்த சிலையோ அமைப்பதற்கு அவர்களால் முடியவில்லை இதேபோலவே மட்டுநகர் பிள்ளையாரடியிலும் ஒரு புத்த சிலை அமைக்க எடுத்த முயற்சியையும் தமிழ்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களாக அப்போது இருந்த நானும் செல்வராசா அண்ணரும் யோகேஷ்வரன் ஐயாவும் தடுத்து நிறுத்தினோம் ஆனால் தற்போது நல்லாட்சி அரசில் எந்த எதிர்ப்பை காட்டினாலும் அவர்கள் அதை பொருட்படுத்தாமல் தாங்கள் நினைத்த விடயங்களை சாதிக்கும் ஒரு அரசாகவே இந்த நல்லாட்சி அரசு செயல்படுகிறது.
இதேபோலவே நில அபகரிப்பு என்றும் இல்லாதவாறு முஷ்லிம் அமைச்சர்களின் உதவியுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறுகிறது.
இவ்வாறான விடயங்களை தடுப்பதற்கான முயற்சிகளை தமிழ்தேசிய கூட்டமைப்பு அதன் தலைவர் சம்மந்தன் ஐயா தலைமையில் முன்னெடுத்து வரும்போதும் அது முழுமையாக தடுக்க முடியவில்லை அதற்காக எமது முயற்சிகள் கைவிடப்படவில்லை தொடர்ந்து கொண்டுதான் இருக்குறது.
கலைபண்பாடுகளை வளர்க்கும் ஒரு இடமாக ஆலயங்கள் விளங்குகிறது ஆலய நிகழ்வுகளில் அரங்கேற்றப்படும் கலை நிகழ்வுகள் சமூகத்தின் எதிர்கால நலன்களை மையப்படுத்தியதாக சமூகசீர்திருத்த நாடங்கள் மற்றும் கலை நிகழ்வுகள் இடம்பெறும்போது அந்த நிகழ்வுகள் மூலமாக மக்கள் நல்ல விடயங்களை உள்வாங்கி நல்லொழுக்கம் உள்ள சமூகமாக நாம் மாற வேண்டும்.
ஆனால் இன்று வடகிழக்கில் உள்ள விடயங்களை நாம் பார்க்கும்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்கொலை அதிகரிப்பும் கடன்தொல்லை என விரக்தியான மனப்பாங்கும் யாழ்பாணமாவட்டத்தில் வாள் வெட்டு போதை பொருள்பாவனை பெண்கள் மீதான கொடுமை என அன்றாடம் செய்திகளை பார்க்கும் போது மனம் வேதனை அடைகிறது.
2009,மே18,ம் திகதிக்கு முன்பு இருந்த ஒழுக்க விழுமியங்கள் தற்போது வடக்கு கிழக்கு இளைஞர்களுடம் இல்லாமல் காணப்படுகின்றது இதற்கான காரணம் எமது இளைஞர்களை அநாகரீகமாவும் பழிவாங்கும் மனோநிலையை அதிகரிக்கும் செயல்பாட்டிலும் போதைவஷ்து மதுபான பாவனைகளை தூண்டும் விதத்திலும் ஏதோ ஒரு சக்தி வடக்கு கிழக்கு பகுதிகளில் செயல் பட்டுக்கொண்டிருக்குறார்கள் என்ற உண்மையை நாம் மறுதலிக்க முடியாது.
இவ்வாறான மனநிலையில் இருந்து எமது இளைஞர்களை மீட்டெக்கும் பொறுப்பு அந்த சமூகம் சார்ந்த புத்திஜீவிகள் ஆலயநிர்வாகம் பொது அமைப்புக்கள் பாடசாலைகள் எல்லாம் இணைந்து முன் எடுக்கவேண்டும் கட்டாயம்
மாணவர்கள் அறநெறி கல்வியை கற்க வேண்டும் இதற்கு பெற்றோர்கள் ஏனய பாடங்களுக்கு பிரத்தியேக வகுப்புக்களுக்கு மாணவர்மீது செலுத்தும் அக்கறையை அறநெறி கல்விக்கும் அந்த அக்கறையை காட்டவேண்டும்.
எத்தனை பரீட்சையில் சித்திபெற்று பட்டம் பெற்று எந்த உயர்ந்த பதவி வகித்தாலும் ஒழுக்கம் இல்லாத எவனையும் சமூகம் ஏற்காது என்பதை இளைஞர்களும் பெற்றோர்களும் உணர்ந்து தமது பிள்ளைகளை ஒழுக்கம் சார்ந்த கல்வியிலும் ஆன்மீகம் சார்ந்த நடத்தையிலும் வளர்க்க வேண்டும் அவ்வாறு செய்ய தவறுவோமானால் எதிர்காலத்தில் தமிழ் சமூகம் ஒழுக்கமற்ற சமூகமாக மாறும் என்பதை புரிந்து கொள்வோம்.
மற்ற இனத்தைபற்றியும் மற்ற இனத்தின் செயல்பாடுகளையும் பற்றி குறை கதைப்பதற்கு முன் நாம் எமது இனத்திற்கும் எமது தாய்மொழியான தமிழ் மொழிக்கும் எம்மால் முடிந்தவரை என்ன செய்துள்ளோம் என்பதையும் ஒருதரம் மீட்டுப்பார்க வேண்டும் எனவும் மேலும் கூறினார்.

Related posts