காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பிரச்சினைக்கு ஒரு தீர்வு வேண்டும்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பிரச்சினைக்கு ஒரு தீர்வு வேண்டும் என்பதற்காக பாதிக்கப்பட்ட சமூகமாக பல இன்னல்கள், போராட்டங்களை நீத்துப் போகச் செய்வதற்கான பல்வேறு சதித் திட்டங்கள், அழுத்தங்களுக்கு மத்தியில் போராடிக் கொண்டிருக்கின்றோம் என வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவி அமல்ராஜ் அமலநாயகி தெரிவித்தார்.
 
எதிர்வரும் 30ம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்படவுள்ள பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி தொடர்பில் தெரியப்படுத்தும் ஊடக சந்திப்பு இன்றைய தினம் மட்டு ஊடக அமையத்தில் இடம்பெற்றது. இதன் போது அவர் கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
எதிர்வரும் 30ம் திகதி சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினம் இதனை முன்னிட்டு கடந்த காலங்களில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினால் வடக்கிலும், கிழக்கிலும் பாரிய போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். அதேபோன்று இவ்வருடமும் ஆர்;பாட்டப் பேரணியை நாங்கள் முன்னெடுக்கவுள்ளோம்.
 
இதுவரை காலமும் இலங்கை அரசினால் எங்களுக்கு எந்தெவொரு பதிலும் கிடைக்காத பட்சத்தில் சர்வதேச பொறிமுறையையே நாடி நிற்கின்றோம். எங்களுக்கு சர்வதேச விசாரணையொன்றினூடாகவே நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே நாங்கள் இந்தப் போராட்டத்தை நடத்தவுள்ளோம். அதேபோன்று இனிவரும் காலங்களில் இவ்வாறான கடத்தல்கள், காணாமல் ஆக்கப்படுதல்கள் இல்லாமல் இருப்பதற்கான உறுதிப்பாட்டினை சர்வதேசம் மேற்கொள்ள வேண்டும்.
 
எமது போராட்டம் வடக்கில் மன்னார் மாவட்டத்திலும், கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் மேற்கொள்ளப்படவுள்ளன. மன்னாரில் இடம்பெறும் போராட்டத்தில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் அங்கு சென்று கலந்து கொள்ளலாம். அதேபோன்று கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்லடிப் பாலத்தில் இருந்து எமது பேரணி ஆரம்பமாகி காந்திப்பூங்கா வரை வந்து அங்கு ஆர்ப்பட்டம் மேற்கொள்ளப்பட்டு பேரணி அறிக்கை வாசிக்கப்பட்டதுடன் நிறைவுபெறும். இந்தப் பேரணியில் அனைவரும் ஒன்றுதிரண்டு கலந்து கொள்ள வேண்டும்.
 
எமக்கு நடந்தது போன்று இனிவரும் எமது சந்ததியினருக்கு இவ்வாறான நிலைமை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே இந்த பேரணிகளை நாங்கள் ஒழுங்கு செய்திருக்கின்றோம். அதேபோன்று இலங்கை அரசு எங்கள் பிரச்சனைக்கான தீர்வினைத் தராத பட்சத்திலேயே நாங்கள் சர்வதேசப் பொறிமுறையை நாடி போராட்டங்களை முன்னெடுக்கின்றோம்.
 
எங்களுக்கு நடந்த அவலங்கள் இனிவரும் எங்கள் சந்ததிக்கும் ஏற்படா வண்ணம் அவர்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்பதற்கான உறுதிப்பாட்டை சர்வதேச நாடுகள் உணர்ந்துகொள்ள வேண்டும். இதற்காக நடாத்தப்படவுள்ள இந்தப் பேரணியில் அனைத்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், மதத்தலைவர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், இளைஞர் கழகங்கள், தேசியம் சார்ந்த அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள், வர்த்தகர்கள், சமூக சேவை நிறுவனங்கள், விiயாட்டுக் கழகங்கள், பண்ணையாளர்கள், மீனவர்கள், விவசாயிகள் உட்பட அனைத்து நலன்விரும்பிகளும் பங்குபற்றி எமக்கு ஆதரவினைத் தர வேண்டும்.
 
எமது போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு பல வருடங்கள் கடந்த நிலையிலும், எங்களது உறவுகளைத் தேடும் பயணத்தில் எம்மோடு பயணித்த தாய்மார் 187 பேருக்கு மேல் நாங்கள் இழந்து நிறங்கின்றோம். அதேபோன்று காலங்கள் கடத்தப்பட கடத்தப்பட சாட்சியங்களும் அழிக்கப்படுகின்றன. எனவே இந்தப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு வேண்டும் என்பதற்காக பாதிக்கப்பட்ட சமூகமாக பல இன்னல்களுக்கும் மத்தியில், போராட்டங்களை நீத்துப் போகச் செய்வதற்கான பல்வேறு சதித் திட்டங்களும், அணுகுமுறைகளும், அழுத்தங்களையும் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
 
அண்மையில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமங்க அவர்கள் கூட கிழக்கில் தமிழ் மக்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்றவாறாக கருத்துக்களை வெளியிட்டுள்ளார். அத்துடன் காணாமல் ஆக்கப்பட்டேர் அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டு 05 வருடங்கள் கடந்த நிலையிலும் கூட இன்னும் ஐந்து பேருக்காவது நியாயம் வழங்கப்படவில்லை. எமது உறவுகளின் உயிர்களை வெறும் இரண்டு இலட்சம் ரூபாய்க்கு நிர்ணயம் செய்ததே தவிர அந்த அலுவலகத்தினால் நியாயமான விசாரணைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. அந்த அலுவலகத்தை நாங்கள் முற்றாக நிராகரிப்பதுடன் ஜனாதிபதியின் இவ்வாறான கருத்து பொய்யானது என்பதையும், எமது மக்கள் இந்த மண்ணிலே பல்வேறு பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்து, இன்னும் தம் உறவுகளைத் தேடிக்கொண்டிருக்கின்றார்கள் என்பதையும் இப்போராட்டம் அவருக்கு வெளிப்படுத்தும்.
 
எனவே எமது உறவுகளைத் தேடும் இந்தப் பயணம் வடக்கு கிழக்கு இணைந்த பயணமாக இருக்கின்றது. பாதிக்கப்பட்ட தாய்மார் நாங்கள் ஒற்றுமையோடு எமது உறவுகளுக்கான நீதியைக் கோரி இந்தப் பேரணியை ஒழுங்குபடுத்தியிருக்கின்றோம். எனவே எங்களுக்காக உரத்த குரல் கொடுக்க எமது போராட்டத்திற்கு வலுச்சேர்க்க அனைவரும் கைகோர்க்க வேண்டும் என்பதை மிகத் தாழ்மையுடனும் உரிமையுடனும் கோரி நிற்கின்றேன் என்று தெரிவித்தார்.
 
 

Related posts