காரைதீவு சிறுமியின் சடலம் 6ஆம் நாள் ஒப்படைப்பு

கடந்த வெள்ளியன்று(18) தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட காரைதீவைச் சேர்ந்த 17வயதுச்சிறுமியின் சடலம் ஆறாம் நாளான (23)புதன்கிழமை மாலை பெற்றோhரிடம் ஒப்படைக்கப்பட்டது.
 
சிறுமியின் சடலம் காரைதீவு .1 இல் உள்ள தாயார் வீட்டில் வைக்கப்பட்டு (24)வியாழக்கிழமை காலை காரைதீவு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
 
காரைதீவில் கடந்த வெள்ளிக்கிழமை (18) அன்று தற்கொலை செய்து மரணித்த சுகுமார் டினேகா (வயது 17)வின் பூதவுடலை குடும்பத்தாரிடம் கையளிக்க அரசும், நீதித்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை மரணித்த சுகுமார் டினேகாவின் குடும்பத்தினர் மற்றும் உறவுகள் நேற்று (22) மாலை இறந்தவரின் வீட்டுக்கு முன்னால் மேற்கொண்டனர்.
 
இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது:
திருமண வாழ்க்கையில் ஈடுபட்ட காரைதீவை சேர்ந்த 17 வயது சிறுமியின் உடலம் கடந்த வெள்ளியன்று தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டு, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டது. உடலத்தை பார்வையிட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி இப்ராஹிம் நஸ்ரூல் இஸ்லாம் உடற்கூற்று பகுப்பாய்வு பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.
 
ஆனால் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக சிறுமியின் குடும்பத்தினர் சொல்வதால் உடற்கூற்று பகுப்பாய்வு பரிசோதனையை மேற்கொள்ள முடியாது என்று சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் பதில் சட்ட வைத்திய அதிகாரி மறுத்து இதை விசேட சட்ட வைத்திய அதிகாரிதான் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.
 
இதையடுத்து அம்பாறை பொது வைத்தியசாலைக்கு உடலம் கொண்டு செல்லப்பட்டது.
 
இருப்பினும் திடீர் மரண விசாரணை அதிகாரியின் உத்தரவின் பிரகாரம் உடற்கூற்று பகுப்பாய்வு பரிசோதனையை மேற்கொள்ள மாட்டார் என்றும் நீதிவானின் உத்தரவு வேண்டும் என்றும் திங்கட்கிழமை அம்பாறை பொது வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்து விட்டார்.
 
கடமையில் ஈடுபட்டு இருந்த சம்மாந்துறை பொலிஸார் எழுத்துமூலம் இதை விசேட சட்ட வைத்திய அதிகாரியிடம் கோரியபோதும் அவர் எழுத்தில் கொடுக்க மறுத்து விட்டார். சம்மாந்துறை நீதிவான் ஐ. என். ரிஸ்வானுக்கு பொலிஸார் விபரங்களை அன்றைய தினமே தெரிவித்தனர்.
 
இதை அடுத்து விசேட சட்ட வைத்திய அதிகாரி மறுநாள் மன்றில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என்று நீதிவான் ஐ. என். ரிஸ்வான் உத்தரவிட்டார். ஆயினும் விசேட சட்ட வைத்திய அதிகாரி மன்றுக்கு ஆஜராக தவறியதால் பிடியாணை உத்தரவை செவ்வாய்க்கிழமை(22) நீதிவான் பிறப்பித்தார்.
 
இந்நிலையிலேயே  உடற்கூற்று பகுப்பாய்வு பரிசோதனையை மேற்கொள்வதற்கு நீதிவானின் உத்தரவை கோரிய சம்பவம் தொடர்பாக பிடியாணை பிறப்பிக்கப்பட்ட அம்பாறை பொது வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரி புதன்கிழமை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.
சட்ட ஏற்பாடுகளை நீதிவான் எடுத்துரைத்து இவரை கடுமையாக எச்சரித்தார்.

Related posts