கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு 10 வருடங்களின் பின்னர் நிரந்தரப் பதிவாளர்!

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய பதிவாளராக மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளையைச் சேர்ந்த அமரசிங்கம் பகீரதன் இன்று திங்கட்கிழமை முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 22ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற கிழக்குப் பல்கலைக்கழக பேரவையின் தீர்மானத்துக்கமைய உபவேந்தரால் இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு – களுதாவளையைச் சேர்ந்த அமரசிங்கம் பகீரதன் கிழக்குப் பல்கலைக்கழத்தின் வியாபார நிருவாகப் பட்டதாரியும், வியாபார நிருவாகப் முதுமாணிப் பட்டதாரியுமாவார். அத்துடன், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் கல்வி டிப்ளோமாவினையும் நிறைவு செய்துள்ளார்.

பட்டம் பெற்ற 1996 ஆம் ஆண்டு முதல் 1999 வரை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தற்காலிக உதவி விரிவுரையாளராகவும், விடுதிக்காப்பாளராகவும் பணியாற்றினார் பின் 1999 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரை சப்பிரகமுவ பல்கலைக்கழகத்தில் உதவிப்பதிவாளராக நியமனம் பெற்றார்.

2002 ஆம் ஆண்டு இடமாற்றம் பெற்று கிழக்குப் பல்கழலைக்கழகத்தில் இணைந்து கொண்ட அமரசிங்கம் பகீரதன் உதவிப் பதிவாளர், சிரேஸ்ட உதவிப் பதிவாளர், பிரதிப் பதிவாளர், பதில் பதிவாளர் உள்ளிட்ட பதவிகளில் பதவி வகித்து வந்திருந்தார்.

2007ஆம் ஆண்டு வரை பதிவாளராக இருந்த ஏ.டி. ஹரிஸ் ஓய்வு பெற்றுச் சென்றது முதல், ஒப்பந்த அடிப்படை, பதில் கடமை அடிப்படைகளில் பதிவாளர்கள் கடமைகளை மேற்கொண்டு வந்திருந்த நிலையில் பேரவை தீர்மானத்துக்கமைய நிரந்தர பதிவாளராக அமரசிங்கம் பகீரதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Related posts