கிழக்கு பல்கலை முன்னால் பாரிய விபத்து ! 9 வயது சிறுவன் பலி 7 பேர் படுகாயம் !!

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  வந்தாறுமூலை (கிழக்குப்பல்கலைக்கழகம் முன்னால்) பிரதான வீதியில் உள்ள மின்கம்பம் மீது வேன் மோதி விபத்து.9 வயது சிறுவன் மரணம். 7பேர் படுகாயமடைந்துள்ளார்கள்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவில் உள்ள வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழககத்துக்கு முன்பாக இன்று (8.7.2018)  அதிகாலை 03.30 மணியளவில் இடம்பெற்ற விபத்திலே ஒன்பது வயது சிறுவன் ஸ்தலத்தில் கொல்லப்பட்டார். ஏறாவூரை சேர்ந்தவர்களே இவ்விபத்தில் சிக்கியுள்ளார்கள்.இவர்கள் ஏறாவூரிலிருந்து தனிப்பட்ட விடயமாக கொழும்பு நோக்கி புறப்பட்டு கொண்டிருக்கையிலே மின்கம்பத்துடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

ஏறாவூர் விதானையார் வீதியை சேர்ந்த ரமீஸ் மௌலவியின் மகனான சாபித்(வயது-9) என்பவரே மரணமடைந்தவராவார்.
இவரது சடலம் ஏறாவூர் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை விபத்தில் மரணமடைந்த சிறுவனின் தந்தையான ரமீஸ் மௌலவி ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவ்விபத்தில் மேலும்  6 பேர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்புக்கு போதனா வைத்தியசாலையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

ஏறாவூர் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்  அப்துல் நாஸர் (அஜ்வத்) சிறுகாயங்களுடன் ஏறாவூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இலங்கை மின்சாரசபையின் மின்கம்பத்துடன் மினிரக வேன் மோதிய நிலையில் செங்கலடி முழுவதும் மின்சாரம் தடைப்பட்டுள்ளது.இது சம்பந்தமாக ஏறாவூர் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Related posts