மட்டக்களப்பில் மரத்துடன் மோதுண்டு இளம் பொலிஸ் உத்தியோகத்தர் உயிரிழப்பு !!

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் நிலையத்தின் கீழ் உள்ள சந்திவெளி பொலிஸ் சாவடியில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோத்தர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருக்கையில் மரத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் இரத்தினபுரி மீதெல்லதெனிய ஒபநாயக்க பிரதேசத்தைச் சேர்ந்த 10 மாத கைக் குழந்தையொன்றின் தந்தையான சத்துரங்க குணசேர (வயது 30) என்பவரே பலியாகியுள்ளார்.

இவர் சந்திவெளி பொலிஸ் காவற் சாவடியிலிருந்து புறப்பட்டு மட்டக்களப்பு -கொழும்பு நெடுஞ்சாலையில் தனியாக மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது, வேகக் கட்டுப்பாட்டை இழந்து, வீதி மருங்கிலிருந்த மரமொன்றுடன் மோதி படுகாயமடைந்து வீழ்ந்து கிடந்துள்ளார்.

உதவிக்கு விரைந்தவர்கள் காயம்பட்டவரை உடனடியாக சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் சேர்ப்பித்துள்ளனர்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்து சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பயனின்றி மரணித்து விட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இச்சம்பவம்பற்றி ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts