கிழக்கு மாகாண சபையை தமிழர்காள் அல்லாதவர்கள் கைப்பற்றினால் அதற்கான முழுப்பொறுப்பையும் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஏற்க வேண்டும்.அமல் எம்.பி.தெரிவிப்பு.

கிழக்கு மாகாண சபையினை தமிழர்கள் அல்லாதவர்கள் கைப்பற்றினால் அதற்கான முழுப்பொறுப்பையும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சித் தலைமைத்துவங்களே ஏற்றுக்கொள்ளவேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாளேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மண்முனைப்பற்று கிரான்குளம் விநாயகர் மகா வித்தியாலத்தில்நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் தொடர்ந்து பேசுகையில்:-

கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டது. எனினும், கிழக்கின் அடுத்த முதலமைச்சர், மாகாணசபை வேட்பாளர் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை  எந்த தீர்மானத்தினையும் இதுவரையும் எடுக்கவில்லை.ஆனால் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 23 ம் திகதி கலைக்கப்படவுள்ள வடக்கு மாகாணசபைக்கு யார் முதலமைச்சர் என்று இப்போதே தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம்,உயர்பீடம் ஒன்றுகூடி முடிவு எடுத்திருக்கின்றது.இது பரவலாக பேசப்படுகின்றது.ஆனால் கலைக்கப்பட்ட கிழக்கு மாகாணசபை தொடர்பாக  தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் ஏன் மௌனமாகவிருக்கின்றது எனக்குத் தெரியவில்லை.

கலைக்கப்பட்ட கிழக்கு மாகாணசபையைப் பற்றியும்,கிழக்கு மாகாண முதலமைச்சர் யார்,அதன் வேட்பாளர்கள் யார்? என்பது பற்றி இதுவரையும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் எந்த முடிவையும் எடுக்கவில்லை.தமிழ்தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்ற அங்கத்துவ கட்சிகளின் தலைமைத்துவங்கள்,தமிழ்தேசியக்கூட்டமைப்பின் தலைமைத்துவங்கள் இம்மாதம் அல்லது வருகின்ற மாதத்திற்குள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி அதில்  உடனடியாக ஒன்று கூடி அடுத்த முதலமைச்சர் யார் என்றும்,தமிழ்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்கள் யார் என்றும் முன்கூட்டியே தீர்மானித்தாக வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் தமிழர்கள் செறிந்துவாழும் கிழக்கு மாகாணசபையை தந்திரோபாயமாக நாம் கைப்பற்றியாக வேண்டும்.அவ்வாறு கைப்பற்றி ஆட்சி செய்யாமல் போனால் அதன் முழுப்பொறுப்பையும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவமே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
கடந்த உள்ளுராட்சி தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பினர் உள்ளுராட்சி வேட்பாளர் பட்டியலில்  காலம் தாழ்த்தி அறிவித்ததால் மட்டக்களப்பு மாவட்டத்தில் சில உள்ளுராட்சிசபைகளை கைப்பற்றாமல் போனது என்பதை ஞாபகமூட்ட விரும்புகின்றேன்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் யார் என்று தமிழ்தேசியக் கூட்டமைப்பு உரிய நேரத்தில் அறிவிக்கும் என தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா குறிப்பிட்டிருந்தார்.இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமுடியாது.தமிழ்தேசியக் கூட்டமைப்பு வினைத்திறனுடன் நன்கு திட்டமிடல்களை கிழக்கில் மேற்கொள்ள வேண்டும்.கிழக்கில் பல்வேறு சாவால்களை தமிழ்சமூகம் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றது.சாவால்களை எதிர்கொண்டு எங்கள் தமிழ்சமூகத்தை பாதுகாக்க வேண்டிய கடற்பாட்டில் நாங்கள் இருக்கின்றோம் எனத் தெரிவித்தார்.

Related posts