சதிகாரர்களின் பின்னால் செல்வோமானால் அம்பாரை மாவட்டத்தில் தமிழர் பிரதிநிதியை இழக்கவேண்டி ஏற்படும்.

அம்பாரை மாவட்டத்தினைப் பொறுத்தமட்டில் தமிழர்களின் வாக்கு வங்கியானது மூன்றாம் நிலையில் இருக்கின்றது இந்நிலையில் பலர் தேசியக் கட்சிகளின் சலுகைகளுக்கும் பணத்திற்கும் உள்வாங்கப்பட்டு தமிழர்களின் வாக்குகளை கூறுபோடும் சதிவேலைகளில் இறங்கியுள்ளனர் அவ்வாறானவர்களுக்கு எமது மக்கள் நடைபெறவுள்ள தேர்தலில் தகுந்த பாடம் கற்பிக்கவேண்டும்.இவ்வாறன சதிகாரர்களின் சதிமுயற்சிக்குப் பின்னால்  தமிழர்கள் செல்வோமானால் அம்பாரை மாவட்டத்தில் தமிழர் பிரதிநிதியை இழக்கவேண்டி  ஏற்படும். என அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் பொறியியலாளர் கலாநிதி எஸ்.கணேஸ் தெரிவித்தார்.

கல்முனைப்பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று புதன்கிழமை ஆதரவாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில் எமது தமிழ் மக்கள் அர்ப்ப சொற்ப சலுகைகளுக்காக ஒருபோதும் சோரம் போகமாட்டார்கள் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் தமிழ்த்; தேசிக் கூட்டமைப்பு என்பதனை நடைபெறவுள்ள பாராளுமன்றத்தேர்தலில் நிருபித்துக் காட்ட வேண்டிய நிலையில் நாம் அனைவரும் இருக்கின்றோம் 

அம்பாரை மாவட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன அதிலும் முக்கியமாக தமிழர்களின் நில அபகரிப்பு கலாசார சீரழிப்பு போன்ற துர்ப்பாக்கிய சம்பவங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன இதில் இருந்து எம் இனத்தினைப் பாதுகாக்கவேண்டும்.

 இந்நிலையினைக் கருத்தில் கொண்டு  நடைபெறும் பாராளுமன்றத்தேர்தலில் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்து இரண்டு பிரதிநிதிகளை அம்பாரை மாவட்டத்தில் தெரிவுசெய்ய வேண்டும் அப்போதுதான் அம்பாரை மாவட்ட தமிழ் மக்களையும் நிலங்களையும் பாதுக்கமுடியும் .

இன்று ஐ.நாவில் தமிழ்மக்களுக்கான நீதிப்பொறிமுறை முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இச் சூழ்நிலையில் ஒட்டுமொத்த தமிழர்களும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பின்னால் இருக்கின்றார்கள் என்ற செய்தியினை ஐ.நாவிற்கும் உலகத்தலைவர்களுக்கும் இத்தேர்தல் மூலம் பறைசாற்றவேண்டும்.

என்னுடைய பாடசாலைக் காலத்தில் இருந்தே தமிழ் மக்களின் உரிமைக்காக பலவழிகளிலும் செயற்பட்டவன் தமிழ் மக்களின் குரலாக ஐ.நா. கூட்டத்தொடரில் பலதடவை கலந்துகொண்டு தமிழ் மக்களின் ஒட்டுமொத்தப் பிரச்சினையினை முன்வைத்திருந்தேன் விஷேசமாக அம்பாரை மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் மற்றும் நில ஆக்கிரமிப்புக்கள் சம்மந்தமாகவும் பக்க  அறைகளில் இரஜதந்திரிகளுடன் பேசியிருக்கின்றேன்.என்னைப் பொறுத்தமட்டில் எமது மக்களின் குரலாக என்றும் ஒலித்துக்கொண்டே இருப்பேன் எனத்தெரிவித்தார்

Related posts