சர்வதேச விசாரணை பொறிமுறையின் அவசியத்தை காட்டவே இந்தியா உதாரணம் – விக்கி

சர்வதேச விசாரணை பொறிமுறையின் அவசியத்தை எடுத்துக்காட்டுவதற்கே இந்தியாவை உதாரணம் காட்டியுள்ளதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் விக்னேஸ்வரன் விளக்கமளித்துள்ளார்.

தமிழ் மக்களை இனப்படுகொலைக்கு உட்படுத்தி நூற்றுக்கணக்கான பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இலங்கை இராணுவத்தை காப்பாற்றும் வகையில் மனித உரிமைகள் சபையில் கூட்டமைப்பு செயற்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

வெளியிட்ட அறிக்கை தொடர்பில் விளக்கம் ஒன்றை அளித்து நீதியரசர் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இலங்கையில் வெளிநாட்டு நீதிபதிகளை கொண்ட கலப்பு நீதிமன்றம் ஒன்றை சட்டரீதியாக அமைக்க முடியாது என்ற இலங்கை அரசாங்கத்தின் வாதம் தவறானது.

இதனை சுட்டிக்காட்டுவதற்காகவே நீதியரசர் பகவதி தலைமையில் அமைக்கப்பட்ட சர்வதேச சுயாதீன குழுவை ஒரு உதாரணமாக வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தேன்.

அறிக்கையின் எந்த இடத்திலும் பகவதி தலைமையிலான சர்வதேச சுயாதீன குழுவை (International Independent Group of Eminent Persons – IIGEP) போன்ற ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று நான் குறிப்பிடவில்லை.

இலங்கையில் உள்நாட்டில் அமைக்கப்பட்ட உள்ளக ஆணைக்குழுவான உடலகம விசாரணை ஆணைக்குழுவை மேற்பார்வை செய்வதற்காக அமைக்கப்பட்டதே பகவதி தலைமையிலான சர்வதேச சுயாதீன குழு என்றும் சர்வதேச தராதரங்கள் மற்றும் விதி முறைகளுக்கு அமைவாக இந்த உள்ளக ஆணைக்குழு செயற்படவில்லை என்று பகவதி தலைமையிலான குழு தன்னைத் தானே கலைத்தமை இலங்கையில் ஏன் சர்வதேச விசாரணை அவசியம் என்பதையும் எடுத்துக் காட்டுகின்றது என்றும் தெளிவாக எனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளேன்.

ஆகவே, பகவதி ஆணைக்குழுவின் உதாரணம் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கிய சர்வதேச விசாரணை பொறிமுறையையே எடுத்துக்காட்டுகிறது” என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் நீதிமன்ற விசாரணைகளை மேற்பார்வை செய்வதற்கு அவர்கள் வருகை தந்திருந்ததாக அவர் சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts