சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர் மனோ சந்திப்பு!

மன்னார் மாவட்டத்தின் அரச, அரச சார்பாற்ற அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர் மனோ கணேசன் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பு இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தலைமையில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு அமைச்சர் மனோ கணேசன் கருத்துத் தெரிவிக்கையில், “நாட்டில் தேசிய ஒருமைப்பாடு மற்றும் இன ஒற்றுமையை தோற்றுவிக்கும் வகையில் எமது செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. வடக்கு கிழக்கு வாழ் தமிழ் முஸ்ஸீம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் சிங்கள மொழி மூலம் சிங்கள மக்களுக்கு தெரியப்படுத்தும் பாரிய பொறுப்பை நாம் மேற்கொண்டு வருகின்றோம்.

மன்னார் மாவட்டத்தில் கடந்த காலங்களில் அரச சார்பற்ற அமைப்புக்கள், மற்றும் சிவில் அமைப்புக்களின் வேலைத்திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. குறித்த அமைப்புக்கள் கடந்த காலங்களில் முகம் கொடுத்த நெருக்கடி தொடர்பிலும், தற்போதைய அவர்களின் செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

எனக்கு வேகம் மட்டும் இல்லை விவேகமும் இருக்கின்றது. கண்மூடித்தனமான வேகமாக மட்டும் இருந்தால் அது ஒரு விபத்தை ஏற்படுத்தி நானும் அழிந்து என் சார்ந்தவர்களையும் அழித்து விடும். எனவே வேகமாக மட்டுமல்ல விவேகமாகச் சிந்தித்துத் செயல்பட வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts