‘சுகாதார அமைச்சால் வடக்கு, கிழக்குக்கு கூடுதல் நிதியொதுக்கீடு’

நாட்டின் சுகாதார சேவைகளுக்காக ஒதுக்கப்படுகின்ற நிதியில் கூடுதலான நிதி, வடக்கு, கிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கே தன்னால் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருவதாக, சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அம்பாறை, பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் சீன அரசாங்கத்தின் 534 மில்லியன் ரூபாய் நிதியுதவியில் நிர்மாணம் செய்யப்படவுள்ள சகல வசதிகளைக் கொண்ட வைத்தியசாலைத் தொகுதிக்கான அடிக்கல்நாட்டு விழா, வைத்திய அத்தியட்சகர் டி.எஸ்.ஆர்.டி.ஆர்.றஜாபின் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, சுகாதார அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் தெரிவிக்கையில், உலக நாடுகளில் சுகாதார சேவையை மக்களுக்கு இலவசமாக வழங்கும் நாடுகளில் இரண்டாம் இடத்தில் இலங்கை இருப்பதாகத் தெரிவித்தார்.

அத்துடன், தான் சுகாதார அமைச்சைப் பொறுப்பேற்றது முதல் ஒளடதங்களுக்கான விலைக் குறைப்புகளை முன்னெடுத்து, வைத்தியசாலைகளுக்குத் தேவையான ஒளடதங்களைக் குறைவின்றி வழங்கி, சிறந்த சுகாதார சேவையை நாட்டு மக்களுக்கு வழங்குவதாகவும் தெரிவித்தார்.

அனைத்து விதமான சுகாதார சேவைகளுக்குமான நிதிகளை, சுகாதார அமைச்சால் முடிந்தளவு நாடளாவிய ரீதியில் ஒதுக்கீடுசெய்து வருவதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.

மேலும், கல்முனை தள வைத்தியசாலையில் இதய நோய்க்கான  சிகிச்சைகள் ஆரம்பித்து வைக்கப்பட்ட பின்னர் அங்கு யாரும் இதய நோய்யால் மரணிக்கவில்லை என்றும், சுகாதார அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Related posts