‘சேனாவை கட்டுப்படுத்தவில்லை அரசாங்கம் பொய்யுரைக்கிறது’

விவசாய திணைக்களம் சேனா படைப்புழுக்களின் தாக்கம் குறைவடைந்துள்ளதாக தெரிவித்துள்ள போதிலும், படைப்புழு  மேலும் வியாபித்து வருவதாக, அகில இலங்கை விவசாய சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.

படைப்புழுவால் அழிவுக்குள்ளான, அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில்\, சோளம் பயிரிடப்பட்ட காணிகளை சென்று சோதனையிட்ட பின்ன​ரே அவர் இவ்வாறு ஊடகங்களுக்கு  கருத்து தெரிவித்தார்.

விவசாய திணைக்களம் படைப்புழுவை அழித்துவிட்டதாக கூறுகிறது. படைப்புழு  உள்ளதென்பதை, திணைக்களத்தின் அதிகாரிகள் வந்து பார்வையிட்டால்  அறிந்துகொள்ள முடியும்.கரம்பான பகுதியிலுள்ள சோளப் பயிர்செய்கையை சோதனையிட்டபோது, எல்லா பயிர்களிலும் படைப்புழுவை அவதானிக்க முடிந்ததாக அமைப்பாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்தார்.

 படைப்புழு ஒழிக்கப்படவில்லை .அரசாங்கம் பொய் கூறுகிறது. நாளுக்கு நாள் படைப்புழு பெருகி வருகிறதென அவர் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன், படைப்புழுவின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு, பொய் உரைக்காது உடனடியான நட்ட ஈட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டதுடன், ஒரு ஏக்கருக்கு 75,000 ரூபாய் வழங்கப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

விவசாயிகள் வங்கிக் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாமல் கஷ்டப்படுகின்றனர் எனவும், சோளப் பயிர்செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள்  தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு ஆளாகியுள்ளனரெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts