ஜனாதிபதியால் அரசுடன் கூட்டமைப்பு இணைந்து செயற்பட முடியாத நிலை: துரைராசசிங்கம்

நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பயணிக்க முடியாத சூழ்நிலையினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உருவாக்கியுள்ளாரா என தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்து விவகார பிரதி அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டமை தொடர்பில் (புதன்கிழமை) அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இந்து விவகார பிரதியமைச்சராக ஒரு முஸ்லிம் ஒருவரை நியமித்திருப்பது மிகப் பெரும் அதிசயமாக இருக்கின்றது. ஜனாதிபதி ஏன் இவ்வாறு சிந்தித்தார் என்று நாங்கள் ஆச்சரியப்பட்டவர்களாக இருக்கின்றோம்.

ஒரு பௌத்த சாசன அமைச்சராக ஒரு முஸ்லிமையோ, கிறிஸ்தவரையோ ஜனாதிபதி நியமிக்க மாட்டார். அவ்வாறு இருக்கின்ற போது எவ்வாறு இந்து சமய விவகாரங்களைக் கவனிப்பதற்காக ஒரு முஸ்லிம் அமைச்சரை நியமித்திருக்கின்றார் என்ற பெரிய கேள்வி எழுந்திருக்கின்றது.

வடக்கு கிழக்கு பிரதேசங்கள் ஏனைய பிரதேசங்களை விட வித்தியாசமானவை. தமிழ்மொழி, தமிழ் மக்களின் வாழ்வு, கலாசாரம் என்பவற்றைப் பாதுகாக்கக் கூடிய விதத்தில் தமிழ் மக்களின் உரிமைகளை நிலைநாட்டக் கூடிய ஒரு அரசியலமைப்பை உருவாக்கி விட வேண்டும் என்பதற்காகவே அரசாங்கத்துக்கு ஒத்துழைப்புகளை வழங்குகின்றோம்.

குறித்த பதவி வழங்கப்பட்டமை பிழையான செயற்பாடு என்பதை ஜனாதிபதி உடனடியாக அறிந்து கொள்வார். ஆகவே இதனை உடனடியாகவே திருத்திக் கொள்வார்.

அதன் மூலம் இந்த நாட்டில் இருக்கின்ற சுமூக நிலையைக் குழப்பாமல் ஜனாதிபதி அவர்கள் நடந்துகொள்ள வேண்டும் என்று எமது மக்கள் சார்பாக அவருக்கு நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts