ஜனாதிபதி கவனம் செலுத்தி புதிய ஆளுநரை நியமிக்குமாறு கிழக்குமக்கள் கோரிக்கை.

பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியிலும் கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவினை அப்பதவியில் இருந்து அகற்றுமாறு ஜனாதிபதியை வலியுறுத்தி இன்று(25)காலை மட்டக்களப்பு மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு விடுத்த அழைப்பினை ஏற்று இந்த ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் பிரதேசங்களில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்து அடைக்கப்பட்டுள்ளதுடன் போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக பாடசாலைகள் இயங்கிய போதிலும் மாணவர்களின் வரவுகள் குறைவாகவே உள்ளன.அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளபோதிலும் மக்கள் வரவு இன்மையினால் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
மட்டக்களப்பு நகரில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன் பொலிஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கை போக்குவரத்துசபை பஸ்கள் மட்டுமே போக்குவரத்துசேவைகளில் ஈடுபட்டுள்ளதுடன் தனியார் போக்குவரத்துசேவைகள் முற்றாக ஸ்தம்பித்துள்ளதுடன் தூர இடத்து பஸ்கள் மட்டும் வந்துசெல்வதை காணமுடிகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களில் இன்று வெள்ளிக்கிழமை என்றபோதிலும் இன்று வழமைக்கு மாறாக வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதை காணமுடிகின்றது.

தமிழ் பிரதேசங்களில் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் பூட்டப்பட்டுள்ளதுடன் அனைத்தும் முடங்கிய நிலையில் காணப்படுகின்றது.
இன்று காலை களுவாஞ்சிகுடி ஏறாவூர்,பெரியநீலாவணை,  மற்றும் சில பகுதிகளில் வீதிகளில் டயர்கள் போடப்பட்டு எரிக்கப்பட்டுள்ளதையும் காணமுடிகின்றது.வீதியில் எரிக்கப்பட்ட டயர்கள் போக்குவரத்து பொலிசாரால் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது.

சித்தாண்டியில் போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட பஸ்களின் மீது கல் வீச்சு தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.வீதிகளில் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளார்கள்,வீதிகளில் பொலிசார் ரோந்துச்சேவையில் ஈடுபட்டுள்ளனர்.கல்வீச்சில் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.சாரதி மற்றும் பயணிகள் உட்பட 4பேர் காயமடைந்துள்ளார்கள்.

Related posts