தொழிலதிபர் க. துரைநாயகம் அவர்களால் 10 இலட்சம் பெறுமதியில் ஏழைக்குடும்பத்திற்கு புதிய வீடு கையளிப்பு

(எஸ்.சபேசன்)
சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் பொருளாளர் சமூகசேவகர் தொழிலதிபர் க.துரைநாயகம் அவர்களின் சொந்த நிதியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மிகவும் வறிய நிலையில் எந்த அடிப்படைவசதியும் அற்ற நிலையில் குடிசையில் வாழ்ந்த குடும்பம் ஒன்றுக்கு 10 இலட்சம் பெறுமதியில் வீடு ஒன்றினை அமைத்து அதனை கையளிக்கும் நிகழ்வு; சுவிஸ் உதயம் அமைப்பின் தலைவர் ஓய்வு நிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு. விமலநாதன் தலைமையில் 09 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
 செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கரடியன்குளம் பகுதியில் களிமண் வீட்டில் யானைகளின் அட்டகாசத்திற்கு மத்தியில் சிறுகுழந்தைகளுடன் வாழும் குடும்பத்திற்கே இந்த வீட்டினை  அமைத்துக் கொடுக்கப்பட்டது.
சுவிஸ் உதயம் அமைப்பின் பிரதிநிதிகள் இப்பகுதியில் கள விஜயத்தினை மேற்கொண்டபோது குறித்த குடும்பத்தின் நிலைமை தொடர்பான தகவல்கள் பெறப்பட்டு அவை சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
அதனை தொடர்ந்து சுவிஸ் உதயம் அமைப்பின் பொருளாளர் துரைநாயகம் அவர்களது மகன் விஜி மகள் சுஜி ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு சுமார் 10 இலட்சம் ரூபா செலவில் குறித்த வீட்டினை அமைத்துக்கொடுப்பதற்கான ஆரம்ப பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டு இன்று அவர்களிடம் யைளிக்கப்பட்டது.
மூன்று குழந்தைகளுடன் கூலித்தொழில்செய்துவரும் குடும்பத்தினர் நீண்டகாலமாக களிமண் வீட்டில் வசித்துவந்த நிலையில் சுவிஸ் உதயம் அமைப்பின் ஊடாக அவர்களுக்கான வீடு அமைத்துக் கொடுத்துள்ளமை மக்கள்மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் பொருளாளர் சமூகசேவகர் தொழிலதிபர் க.துரைநாயகம்அவர்கள்  பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்ததுடன் மற்றும் சுவிஸ் உதயத்தின் கிழக்குமாகாணக்கிளையின் பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன்,பிரதித்தலைவர் ஓய்வுநிலை உதவிக்கல்விப்பணிப்பாளர் கண. வரதராஜன், மட்டக்களப்பு இணைப்பாளர் திருமதி றொமிலா செங்கமலன் கணக்காய்வாளர் எஸ்.நாகேந்திரன் உறுப்பினர்களான குணசேகரம்,அகிலன்,இ.ஜீவராஜ் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

Related posts