நள்ளிரவில் நடுஊருக்குள் யானையின் அட்டகாசம்!ஒரு புறம் கொரோனா மறுபுறம் யானை: மரணபயத்தில் மக்கள்!

நள்ளிரவு வேளையில் நடுஊருக்குள் புகுந்த யானையின் அட்டகாசத்தால் மதில்கள் சேதமடைந்ததுடன் தென்னைகளும் துவம்சம் செய்யப்பட்டன.
 
இச்சம்பவம் சம்மாந்துறைப்பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவுக்கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. நேற்று நள்ளிரவில் இடம்பெற்ற சம்பவத்தில் காரைதீவு 6 ஆம் பிரிவைச்சேர்ந்த த.கணேசராஜா என்பவருக்கு இச்சேதம் ஏற்பட்டுள்ளது.
 
காரைதீவு இராணுவமுகாமின் பின்னால் நுழைந்து மேற்குப்புற மதிலை உடைத்துக்கொண்டு உள்ளே வந்த யானை அங்குள்ள தென்னை வாழைகளை பதம்பார்த்ததோடு கிழக்கேயுள்ள மதிலை இடித்துத்தள்ளி வெளியேறியுள்ளது. தெய்வாதீனமாக மனிதனின் பக்கம் அதன்பார்வையை செலுத்தவில்லை. ஆதலால் உயிராபத்து ஏற்படவில்லை.
 
அங்கிருந்து சென்ற யானை நந்தவனப்பிள்ளையார் ஆலயத்தினூடாகச்சென்று அருகிலுள்ள சிலவீடுகளுக்குச்சென்று நெல்மூடைகளை பதம்பார்த்ததோடு பயிர்பச்சைகளுக் கு சேதம் விளைவித்துச்  சென்றுள்ளது.
 
அண்மைக்காலமாக கொரோனாவின் தாக்கத்தால் மக்கள் பீதியடைந்து மரணபயத்தில் உள்ளனர். அதேவேளை காட்டுயானையின் இவ்விதமான திடீர் தாக்குதலால்; மக்கள் பீதியிலுள்ளனர்.
 
ஒரு புறம் கொரொனா மறுபுறம் யானை இரண்டுக்கும் நடுவே மரணபயத்தில் மக்கள் திண்டாடுகின்றனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யானையின் சேதங்களை மதிப்படமுன் அதன் வரவை தடுத்துநிறுத்தவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.

Related posts