நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் தீர்மானிக்கவில்லை: சபாநாயகர்

அமைச்சர்களினதும், நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் சம்பளத்தினை அதிகரிப்பது தொடர்பில் எந்தவொரு இறுதி தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லை என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

சபாநாயகரின் ஊடக பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘நாடாளுமன்றத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் திகதி நிறைவேற்றப்பட்ட ஒழுங்கு விதிகளின் பிரகாரம் நீதிமன்ற உயர் நீதிபதிகளின் சம்பள உயர்வுக்கு சமாந்தரமாக அமைச்சர்களினதும் நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும்.

இதற்கமைய நீதிபதி, நீதியரசர்களின் சம்பளம் அண்மையில் அதிகரிக்கப்பட்டமை அடுத்து அமைச்சர்களினதும் நாடாளுமன்ற உறுப்பினர்களினதும் சம்பளம் அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் வாயிலாக செய்தி வெளியிடப்பட்டது. எனவே அமைச்சர்களினதும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் அதிகரிப்பது தொடர்பில் எந்தவொரு தீர்மானமும் இதுவரை எடுக்கப்படவில்லை.

மக்களின் பிரதிநிதிகளின் சம்பள அதிகரிப்பு தொடர்பாக கிடைக்கபெற்ற கோரிக்கையை ஆராய்ந்து பார்க்குமாறு நாடாளுமன்ற செயலாளரிடம் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆலோசனை வழங்கியுள்ளார்’ என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

Related posts