மிருசுவில் பகுதியில் வாள்வெட்டுக்குழுவின் கார் மீட்பு!

மிருசுவில் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்ட வாள்வெட்டுக் கும்பல் தப்பிச் சென்ற கார் மீட்கப்பட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மிருசுவில் வடக்கு வீதியில் உள்ள தம்பு ஜெயானந்தம் என்பவரது வீட்டுக்குள் நேற்று இரவு வாள்கள், பொல்லுகளுடன் பத்துக்கும் மேற்பட்டோர் கொண்ட கும்பல் புகுந்து, வீட்டில் இருந்தவர்களையும் அயல் வீட்டில் வசித்தவர்களையும் சரமாரியாக தாக்கியது.

இதன்போது அயலில் உள்ளவர்கள் கூக்குரல் இட்டதால் கிராம மக்கள் திரட்டனர். அதனால் கார் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் தப்பி ஓடியுள்ள நிலையில், அவர்களை மக்கள் விரட்டிச்சென்றிருந்தனர்.

இந்நிலையில், கும்பலைச் சேர்ந்த சிலர் பயணித்த காரினுடைய சக்கரம் காற்றுப் போனதனால் அதனைக் கைவிட்டுவிட்டு அதில் பயணித்தவர்கள் தப்பிச்சென்றுவிட்டனர்.

இதன்போது குறித்த காரைக் கைப்பற்றிய பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் சாவகச்சேரி, சரசாலை வடக்கைச் சேர்ந்த காரின் உரிமையாளரைக் கைது செய்துள்ள நிலையில், அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts