நாளை சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 129வது ஜனனதினம்

உலகின் முதல் தமிழ்ப்பேராசிரியர், இராமகிருஸ்ணமிசனின் இலங்கை ஸ்தாபகர் ,முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின்  129வது ஜனன தினம் நாளை(27)சனிக்கிழமையாகும்.
 
இதனையொட்டி அவர் பிறந்த காரைதீவு மண்ணில்,இருவேறு பெரு விழாக்கள் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
 
முதல் விழா காரைதீவு பிரதானவீதி விபுலாநந்த சதுக்கத்திலுள்ள, சுவாமி விபுலாநந்த அடிகளாரின் திருவுருவச்சிலை முன்றலில் காரைதீவு பிரதேசசபை நடாத்துகின்ற “வியத்தகு  வித்தகர் விபுலாநந்தர் ” பெருவிழா தவிசாளர் கி.ஜெயசிறில் தலைமையில் நடைபெறவுள்ளது.
 
இந்நிகழ்விற்கு பிரதமஅதிதியாக, வீதிஅபிவிருத்திஅதிகாரசபையின் கிழக்குமாகாண பணிப்பாளர் பட்டயப்பொறியியலாளர் திருமதி கலைவாணி வன்னியசிங்கம்(காரைதீவின் முதல் பெண் பொறியியலாளர்) கலந்து சிறப்பிக்கவிருக்கிறார்.
 
இரண்டாவது விழா காரைதீவு விபுலாநந்த ஞாபகார்த்த பணிமன்றத்தின் ஏற்பாட்டில், மூன்றுகட்டங்களாக சுவாமிகள் பிறந்தமனை வளாகத்தில், தலைவர் வெ.ஜெயநாதன் தலைமையில் நடைபெறவிருக்கிறது.
 
முதல்கட்டமாக விபுலாநந்தசதுக்கத்திலுள்ள ,சுவாமியின் திருவுருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்தல் இரண்டாம்கட்டமாக சுவாமிகள் பிறந்தவீட்டிலுள்ள, திருவுருச்சிலைக்கு மலர்மாலை புஸ்பாஞ்சலி நிகழ்வுகளைத்தொடர்ந்து காரைதீவுமண் இ.கி.மிசனுக்கு அளித்த இருபெரும்துறவிகளின் திருவுருவப் படங்கள் திறந்துவைக்கப்படவிருக்கின்றன.மூன்றாம்கட்டமாக பிற்பகலில் மணிமண்டபத்தில் கௌரவிப்பு நிகழ்வு இடம்பெறும்.
 
இந்நிகழ்வில் இந்துகலாசார திணைக்களப்பணிப்பாளர் அருளாநந்தம் உமாமகேஸ்வரன் பிரதமஅதிதியாகக் கலந்துசிறப்பிக்கிறார்.
 

Related posts