படுவான்கரையில் வர்த்தகமானி விளம்பரத்தால் 500 குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை.இரா.துரைரெட்ணம் கவலை தெரிவிப்பு.

மட்டக்களப்பு மாவட்டத்தின், மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள 2000ஏக்கர் காணிகள் யாருக்கும் தெரியாத வகையில் வலுமீள் புதுப்பித்தல் வலு அமைச்சினால் வர்த்தமானி விளம்பரம் செய்யப்பட்டதை வன்மையாக கண்டிக்கின்றேன் என முன்னாள் மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனைக்குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில்,
மண்முனை மேற்கு பிரதேசத்தில் மேய்ச்சல் தரைக்காகவும், விவசாய மேட்டுநிலப் பயிர்ச்செய்கைக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்ற 2000ஏக்கர் காணிகள், மாவட்டத்தின் அரசாங்க அதிபருக்கும், பிரதேச செயலாளருக்கும் தெரியாத வகையில் அப்போதைய வலுமீள் புதுப்பித்தல் வலு அமைச்சராகவிருந்த ரஞ்சித் சியாம்பலாப்பிட்டிய காலத்தில், குறிப்பாக 2017ஆண்டு யூன் மாதம் 05ம் திகதி  வர்த்தமானி அறிவித்தல் செய்யப்பட்டுள்ளது.

ஆயிலியடிச்சேனையில் 507.25ஏக்கரும், கண்டியநாற்றில் 726ஏக்கரும், பன்சேனையில் 548.5ஏக்கர் காணியும் வர்த்தமானி அறிவித்தல் செய்யப்பட்டுள்ளது. இக்காணிகளில் பன்சேனை பகுதியில் 50ஏக்கரில் சோளார் மின் உற்பத்திக்காக சகோதர இனத்தினைச் சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள யாருக்கும் தெரியாத வகையில் இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளமை கண்டிக்கத்தக்கது.இச்செயற்பாட்டின் மூலமாக 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதாரத்தினை இழக்கும் நிலையேற்பட்டிருக்கின்றது.
இது தொடர்பில் உரிய கவனம் செலுத்தி உடனடியாக வர்த்தமானி அறிவித்தலை இரத்துசெய்யும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.Attachments area

Related posts