பலத்த காற்றினால் கொழும்பில் 153 வீடுகள் சேதம்

கொழும்பின் பல பகுதிகளை ஊடறுத்து வீசிய பலத்த காற்றினால் 153 வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

தெஹிவளை, ஹோமாகம, கெஸ்பேவ, பிலியந்தலை உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை வேளையில் பலத்த காற்று வீசியதாக அனர்த்த முகாமைத்து மத்திய நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.

ஹோமாகம பகுதியிலேயே அதிகளவான (75) வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, மத்திய மலைநாட்டில் நிலவும் கடும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக  தெரிவித்தனர்.

இதேவேளை, நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்களிலும் காற்றின் வேகமானது அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், மத்திய, வட மத்திய, வடக்கு, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

அதேவேளை, நாட்டின் பல பிரதேசங்களில் அடிக்கடி மழை பெய்யக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts