பிரதேசசபை ஊழியரை மோதித்தள்ளிய தனியார் பஸ்! காரைதீவில் கோரவிபத்து: ஊழியர் பலி!

 
 
 
காரைதீவில் இடம்பெற்ற விபத்தில் காரைதீவு பிரதேசசபை ஊழியர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மரணமானார்.

இச்சம்பவம் (15) ஞாயிற்றுக்கிழமை நண்பகல் கல்முனை அக்கரைப்பற்று பிரதானவீதியில் காரைதீவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் காரைதீவு பிரதேசசபையின் ஊழியராக சீனித்தம்பி கந்தசாமி(55) என்பவரே நிலைமை கவலைக்கிடமானநிலையில் சம்மாந்துறை ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர்மேலதிகசிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பி.ப.3.45மணியளவில் மரணமானார்

காரைதீவைச்சேர்ந்த அரசஊழியரான  சீனித்தம்பி  கந்தசாமி   2பெண்பிள்ளைகளின் தந்தையராவார். கடமைநேரத்தில் அவர்விபத்துக்குள்ளாகியுள்ளார்.

சம்மாந்துறையிலிருந்து  வரவழைக்கப்பட்ட விசேட அம்புலன்ஸ் மூலம்  வைத்தியசாலைக்குக்  கொண்டுசெல்லப்பட்டார்.

அக்கரைப்பற்றிலிருந்து கல்முனைநோக்கி வந்த இ.போ.ச. பஸ் அந்தஇடத்தில் தரித்துநின்று பயணியை இறக்கிக்கொண்டிருந்தவேளை பின்னால் வேகமாகவந்து இ.போ.ச.பஸ்ஸை முந்திய தனியார் பஸ் வீதியில் பைசிக்கிளில்  சென்றுகொண்டிருந்த பிரதேசசபை ஊழியரை மோதித்தள்ளியது என முதற்கட்டவிசாரணையிலிருந்து தெரியவருகிறது.

ஸ்தலத்திற்கு விரைந்த காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கி.ஜெயசிறில் சம்மாந்துறைப்பொலிசாருடனும் சம்பந்தப்பட்ட தனியார் பஸ் உரிமையாளருடனும்  தொடர்புகொண்டார்.

சம்மாந்துறை ஆதாரவைத்தியசாலைக்குச் சென்ற தவிசாளர் ஜெயசிறில் வைத்தியர்களோடு கலந்துரையாடினார். காரைதீவுப் பிரதேசசபை  ஊழியரை மோதித்தள்ளிய தனியார் பஸ்ஸின் உரிமையாளர் சம்மாந்துறைப்பொலிசாரால் கைது செய்து தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

தனியார் பஸ்ஸை உரிமையாளர் அகற்றபுறப்பட்டபோது மக்கள்கொந்தளித்தனர். உடனே சம்மாந்துறை பொலிஸ்பொறுப்பதிகாரி விரைந்து அனைத்தும் சட்டப்படி நீதியாகநடைபெறும்.யாரும் சந்தேகப்படத்தேவையில்லைஎனக்கூறி பஸ்ஸை பொலிஸ்நிலையத்திற்குக் கொண்டுசெல்லப்பணித்தார்.


மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.

இதேவேளை சடலம்கொண்டுவரப்பட்டு பிரதேசசபையில்அஞ்சலிக்காக வைக்கப்படும் என்று தவிசாளர் கி.ஜெயசிறில் தெரிவித்தார்.
 
 

Related posts