புளொட் ஸ்தாபக தலைவர் அமரர் க.உமாமகேஸ்வரனின் 76வது பிறந்ததின நிகழ்வுகள்

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஸ்தாபக தலைவர் அமரர் கதிர்காமத்தம்பி உமாமகேஸ்வரன் அவர்களின் 76வது பிறந்ததினத்தையொட்டி உமாமகேஸ்வரன் பவுண்டேசன் அமைப்பினால்  (18) மட்டக்களப்பில் பல்வேறு பகுதிகளில் உதவி வழங்கல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

 
உமாமகேஸ்வரன் அவர்களின் பிறந்த தின முதல் நிகழ்வாக கொக்கட்டிச்சொலை அரசடித்தீவு சக்தி இல்ல சிறுவர்களுக்கு உணவு வழங்கும் செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதேவேளை சிறார்கள் கேக் வெட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
 
அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு நாவற்குடா பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சியினை ஊக்குவிக்கும் முகமாகவும், அம்மாணவர்கள் மத்தியில் சேமிப்புப் பழக்கத்தை வளப்படுத்தும் நோக்கோடும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் சேமிப்பு வைப்புக் கணக்கு ஆரம்பிக்கப்பட்ட சேமிப்புப் புத்தகங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
 
பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் பொருட்டு தலா ஒரு மாணவருக்கு ரூபா 1500.00 சேமிப்பு செய்யப்பட்ட சேமிப்புப் புத்தகமும், அதனுடன் இணைந்த வகையில் கற்றல் உபகரணமுமாகச் சேர்த்து ரூபா 2600.00 பெறுமதியான உதவித் திட்டம் 30 மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
 
இவ்வுதவியானது கனடாவைச் சேர்ந்த அமரர் சுப்பிரமணியம் சீதா ரோஸ்மேரி அவர்களின் முதலாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சீதா ரோஸ்மேரி அவர்களின் புதல்வர் சுப்பிரமணியம் ரவீந்திரன் அவர்களின் நிதிப்பங்களிப்பில் மேற்கொள்ளப்பட்டது.
 
இந்நிகழ்வுகளில் நாவற்குடா கங்காணிப் பிள்ளையார் ஆலய குருக்கள் சிவஸ்ரீ உ.ஜெயகிருஸ்ணா, மண்முனை தென்மேற்குப் பிரதேசசபைத் தவிசாளர் சி.புஸ்பலிங்கம், மண்முனை மேற்கு பிரதேசசபைத் தவிசாளர் செ.சண்முகராசா, பிரதித் தவிசாளர் பொ.செல்லத்துரை, மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் ம.நிஸ்கானந்தராஜா, இணக்கசபை உபதலைவர் கலாபூசனம் க.வைரமுத்து, ஓய்வுபெற்ற அதிபர் வி.கமலநாதன், மேற்படி அமைப்பின் நிருவாகிகளான என்.ராகவன், ஓய்வுபெற்ற அதிபர் க.கிருபைராசா, ஆசிரியர் கா.கமலநாதன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts