பெரியாரை மதியாத சமுகத்தில் பெரியார்கள் உருவாகமாட்டார்கள்! ‘தடங்களின் நினைவுகள்’நூல்வெளியீட்டுவிழாவில் நூலாசிரியர் டாக்டர் ஜெமீல்.

பெரியாரை மதியாத சமுகத்தில் பெரியார்கள் உருவாகமாட்டார்கள்’ என்பது அறிஞர் சித்திலெவ்வையின் கருத்தாகும். உண்மையில் சமுகத்தில் சேவைசெய்தவர்களை அச்சமுகம் மதிக்கத்தவறுமானால் அச்சமுகத்தில் சேவையாளர்கள் உருவாகமாட்டார்கள். அதன் பிரதிபலிப்பே இந்த சுயசரிதை நூல் எழுதுவதற்குக் காரணமாகும்.
இவ்வாறு சாய்ந்தமருது சிரேஸ்ட பிரஜைகள் சபையின் தலைவரும் பிரபல சமுகசேவையாளருமான  டாக்டர் எம்.ஜ.எம்.ஜெமீல் ‘தடங்களின் நினைவுகள்’ நூல்வெளியீட்டு விழாவில் ஏற்புரையாற்றியபோது தெரிவித்தார்.
சர்வதேச முதியோர் தினத்தன்று சாய்ந்தமருதைச்சேர்ந்த பிரபல சமுகசேவையாளர் டாக்டர் எம்.ஜ.எம்.ஜெமீல் எழுதிய ‘தடங்களின் நினைவுகள்’ நூல்வெளியீட்டுவிழா நேற்றுமுன்தினம் சாய்ந்தமருதிலுள்ள அவரது இல்லத்தில் சுகாதாரமுறைப்படி சொற்ப பங்குபற்றுனர்களுடன் சிறப்பாக நடைபெற்றது.
அம்பாறை மாவட்ட சர்வசமய சம்மேளனத்தின் தலைவரும் சமாதானத்திற்கான சமயங்களின் இலங்கைச்சபையின் அம்பாறைமாவட்டத்தலைவருமான டாக்டர் எம்.ஜ.எம்.ஜெமீல் தனது 77வருடகால வாழ்க்கையை சுயசரிதையாக எழுதி ‘தடங்களின் நினiவுகள்’ என்ற மகுடத்தின்கீழ் 170பக்கங்களில் வெளியிட்டுள்ளார். இதனை சாய்ந்தமருது சிரேஸ்ட பிரஜைகள் சபை வெளியிட்டுவைத்தது.
 
சாய்ந்தமருது சிரேஸ்ட பிரஜைகள் சபையின் செயலாளர் அல்ஹாஜ் எம்.ஜ.அப்துல் ஜப்பார் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் நூல் அறிமுகவுரையை முன்னாள் கல்முனை சாஹிறாக்கல்லூரி அதிபரும் மூத்தஎழுத்தாளருமான கலாபூசணம் எ.பீர்முகமட்டும் நூல் விமர்சனஉரையை மூத்த எழுத்தாளரும் உதவிக்கல்விப்பணிப்பாளருமான  விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜாவும் நிகழ்த்தினர்.
 
வர்த்தகப் பிரமுகர் முஹம்மட் நஸீர் ஹாஜியார், நூலின் முதற் பிரதியை பெற்றுக் கொண்டார்.
 
இதன்போது சாய்ந்தமருது வைத்தியசாலையின் ஓய்வுபெற்ற வைத்திய அதிகாரி டொக்டர் எஸ்.ஏ.ஆர்.எம்.மௌலானா, நூலாசிரியர் டொக்டர் எம்.ஐ.எம்.ஜெமீலின் வைத்திய மற்றும் கல்வி, கலாசார, சமூக சேவைகளையும் சமாதான, இன ஐக்கிய, சிவில் செயற்பாடுகளையும் பாராட்டி பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.
 
அங்கு டாக்டர் ஜமீல் மேலும் ஏற்புரையாற்றுகையில்:
சமுகத்தில் நற்பணியாற்றி நல்லபண்புகளுடன் வாழ்ந்த பெரியோர்களையும் சாதi ன படைத்தவர்களையும் பாராட்டிக் கௌரவிக்கும் பழக்கம் குறைவடைந்துவருகிறது. உண்மையில் அப்படிப்பட்ட பெரியவர்களை அச்சமுகம் பாராட்டத்தவறுகின்ற பட்சத்தில் அவர்களாகவே அவர்களது சேவையை வெளிக்கொணரவேண்டிய தேவை அவசியம் எழுகின்றது. அதன் வெளிப்பாடே இந்த சுயசரிதை.
நான் உண்மையில் பாராட்டையோ கௌரவிப்பையோ  எதிர்பார்க்கவில்லை. எனினும் நான்சார்ந்த துறைகளில் நிறுவனங்களில் ஆற்றியசேவைகளை அவர்கள் வெளிக்கொணர்ந்திருந்தால் அது ஏனைய வருங்கால சந்ததியினருக்கு முன்னுதாரணமாகஇருந்திருக்கும். ஆனால் அது நடைபெறவில்லை.ஆதலால் நானாகவே எனது சுயசரிதையை எழுத உந்தப்பட்டேன்.அதன் வெளிப்பாடுதான் இந்த நூல்.
இங்கு ஓய்வுபெற்ற பிரபல பாளிகா அதிபர் பஷீர் இருக்கிறார்;. அவர் முன்மாதிரியாக இருந்திருக்கிறார். அவர் அவரது காலத்தில் அங்கு நடைபெற்ற அனைத்து விழாக்களிலும் முன்னாள் ஸ்தாபக அதிபரான ஹமீட் அவர்களை அழைக்கின்ற பண்பைப் பார்த்திருக்கிறேன். அத்தனை விழாக்களிலும் அவரைக்கணாலாம். அதிபர் பஷீரின் மூத்தோரை மதிக்கும் பண்பு உயர்ந்தது. அதனால் அவர் உயர்ந்து நிற்கிறார். இனிமேல் உள்ளவர்கள் பஷீரை அழைப்பார்களா? என்பது சந்தேகம்.
மூத்தோர் எனும்போது வயதுகூடியவர்கள் மட்டுமல்ல சமுகத்தில் சேவையில் மூத்தவர்களை பண்பில் மதிப்பதில் நல்லவர்களைக்கூறலாம்.
 
நான் கொழும்பு சாஹிறாக்கல்லூரியில் பயின்ற போது அங்குள்ள அதிபர் எ.எம்.எ.அசீஸ் இராஜினாமாச்செய்த காரணத்தினால் எழுந்த குழப்பத்தில் எமது உயர்தரப்படிப்பு சீர்குலைந்தது. அதனால் நான் நேராக மருத்துவத்துறைபட்டப்படிப்பிற்குச்செல்லமுடியாமல் போனது. எனினும் அப்போதிக்கரி பயின்று சமுகத்தில் வேறுபல திருப்தியான சேவைகளைச் செய்யமுடிந்தது. இறைவன் நாடினால் நாம் சாதனை படைக்கலாம்.அது முடியும்.
வாழ்க்கையில் 58வருடங்கள் எனது சேவையில் மிகவும் திருப்தியடைந்தேன். எனக்கு பூரண ஒத்துழைப்பை நல்கிய அனைவருக்கும் இத்தருணத்தில் நன்றிகூற ஆசைப்படுகின்றேன்.என்றார்.
அதிபர் ஏ.ஜீ.ஏ.றிசாட் நன்றியுரையாற்றினார். பிரதிகள் சமுகமளித்த பிரமுகர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.

Related posts