பொதுமக்கள் வழங்கிய வாக்குகளுக்கு எதிராகச் செயற்படுவது தேசத்துரோகம்: சஜித் பிரேமதாச!

பொதுமக்கள் வழங்கிய வாக்குகளுக்கு எதிராகச் செயற்படுவது தேசத்துரோகம் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

புத்தளம், கொட்டுக்கச்சி பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 173 ஆவது வீடமைப்புத் திட்டத்தை இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மக்களின் விருப்பத்திற்கு, மக்களின் அபிலாஷைகளுக்கு எதிராகச் செயற்படுவோர் தேசத்துரோகிகள். சிறந்த நாட்டை உருவாக்குவதற்காக நீங்கள் அளித்த வாக்குகளுக்கு நாம் கடனாளிகள்.

எனவே நாம் உங்களுக்கு எப்போதும் கடனாளிகள். அமைச்சுப் பதவி முதல் ஜனாதிபதி, பிரதமர் பதவிவரை அனைத்தும் மக்கள் வழங்கியது. அதற்கான கடனைச் செலுத்த வேண்டும்.

இன்று மீண்டும் ராஜபக்ஷ என்ற குடும்ப ஆட்சியை நிலைநிறுத்த சிலர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அப்படி அவர்கள் தெரிவானால் மாவட்டம் தோறும் சொகுசு மாளிகைகள் உருவாகும்.

உங்களிடம் இருந்து பெறப்படும் வரியின் மூலமே அபிவிருத்திகள் நடைபெறுகின்றன. எனவே நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டும், ஆழமாகச் சிந்தித்தும் நாம் முடிவுகளை எடுக்க வேண்டும்” என சஜித் பிரேமதாச மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts