மட்டக்களப்பில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வறுமை ஒழிப்புத்திட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மீளாய்வு

இலங்கை அரசாங்கம் கொரிய நாட்டு அரசாங்கத்திற்குமிடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கமைய உலக உணவுத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2019, 2020 ஆண்டுகளில் நடைமுறைப்படுத்தப்படும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வறுமை ஒழிப்புத்திட்டம் தொடர்பான திட்ட மீளாய்வுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில் இன்று (07) மாவட்ட செயலகத்தில் இடம் பெற்றது. 
 
அரசாங்கத்தின் அங்கீகாரத்தில் சுமார் 144 கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில் வறுமைக் கோட்டின்கீழ் மக்கள் வாழும் ஐந்து மாவட்டங்களில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வறுமை ஒழிப்புத்திட்டம் தற்பொழுது துரிதமாக முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. இதனடிப்படையில் மட்டக்ளப்பு மாவட்டத்தின் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டங்கள் தொடர்பான மீளாய்வு செய்யப்பட்டது.
 
இதுதவிர மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவில் 2019 ஆண்டு முதல் தெரிவு செய்யப்பட்ட 10 கிராமங்களில் வறிய மக்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் ஜீவனோபாயத் திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
 
இதன்போது நிதி, பொருளாதார மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சின் உலக உணவுத்திட்ட ஒத்துளைப்பு பிரதிப் பணிப்பாளர் கே. பீ. நிசந்த, உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்காண பணிப்பாளர் பிரன்டா பாடன், கொரியா சர்வதேச ஒத்துளைப்பு நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் காங் யுஆன் ஹவா, உலக உணவுத் திட்டத்தின் அரசபங்காளி  இணைப்பு உத்தியோகத்தர் முஸ்தபா நிஹ்மத் தலைமையிலான அதிகாரிகளும், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் கே. ஜெகதீஸ்வரன், வவுணதீவு பிரதேச செயலாளர் எஸ். சுதாகரன், கமநல சேவைகள் திணைக்கள உதவி ஆணையாளர் கே. ஜெகநாத், விவசாய விரிவாக்கல் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் வீ. பேரின்பராசா, உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆர். ஜதீஸ்குமார் உட்பட பல திணைக்களங்களின் அதிகாரிகளும் பிரசன்னமாயிருந்தனர்.
 
இம்மீளாய்வுக் கூட்டத்தினைத் தொடர்ந்து இந்த விசேட திட்டங்கள் நடைறைப்படுத்தப்படும் இப்பிரதேச செயலகப் பிரிவின் பன்சேனை, காஞ்சிரங்குடா, குறுஞ்சாமுனை, பாவக்கொடிச்சேனை, இலுப்படிச்சேனை, புதுமண்டபத்தடி ஆகிய கிராமங்களுக்கு உலக உணவுத்திட்டத்தின் நன்கொடையாளர் கண்காணிப்புப் பணிக்குழு களவிஜயம் மேற்கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களை பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது.
 
????????????????????????????????????

Related posts