மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் வேகமாக அதிகரித்து வருகின்றது. கடந்த ஜனவரி 08 ஆந் திகதி தொடக்கம் ஜனவரி 15 ஆந் திகதி வரையும் 145 பேர் டெங்குநோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர்.
 
இந்த வாரம் டெங்கு தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 45 நோயாளர்களும், கோரளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 25 நோயாளர்களும்;, காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 21 நோயாளர்களும், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 15 நோயாளர்களும், மண்முனை வடக்கு மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 13 நோயாளர்களும், கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 09 நோயாளர்களும், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 07 நோயாளர்களும், ஏறாவூர் நகர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 04 நோயாளர்களும், மண்முனைப் பற்று ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 03 நோயாளர்களும், வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 நோயாளர்களும், களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவருமாக மொத்தம் 145  பேர் டெங்கு நோய் பாதிப்புக்குள்ளானவர்களாக இனங் காணப்பட்டுள்ளனர்.   
 
இருப்பினும் வாகரை, பட்டிப்பளை, வவுனதீவு ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் டெங்கு நோயாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லை.
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ் வருடத்தில் 610 பேர் டெங்கு நோய்த் தாக்கத்திற்குட்பட்டுள்ளதாகவும் இதுவரை எவரும் மரணமடையவில்லை எனவும் பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
இதேவேளை இம் மழைகாலத்தில் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கி கிடக்கின்ற குப்பைகள் நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பரவுவதற்கு இடம் கொடுக்காத வகையில் சூழலை துப்பரவாக வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 

Related posts