மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திருமதி.அ.பாக்கியராஜா சமுர்த்தி திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக பதவி உயர்வு!!

மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திருமதி.அமிர்தகலாதேவி பாக்கியராஜா அவர்கள் இலங்கை சமுர்த்தி திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக பதவி உயர்வு பெற்று எதிர்வரும் 2022.01.24 அன்று கொழும்பில் சமுர்த்தி திணைக்களத்தில் கடமையை பொறுப்பேற்கவுள்ளார்.

1991.05.20 அன்று தனது முதல் அரச சேவையை ஒரு ஆசிரியையாக தொடங்கிய இவர் தமது முதல் ஆசிரியை நியமனத்தை மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் ஓர் கணித மற்றும் விஞ்ஞான ஆசிரியையாக 1994.01.16 வரை கடமையாற்றியுள்ளார். அதன் பின் 1994.01.17ம் திகதி அன்று இலங்கை திட்டமிடல் பிரிவுக்கு உள்வாங்கப்பட்டு 1994.05.08 வரை இதற்கான பயிற்சிகளை கொழும்பில் பெற்றுக் கொண்டு, 1994.05.09 தொடக்கம் 2001.06.27 வரை உதவி திட்டமிடல் பணிப்பாளராக களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் கடமையாற்றிய இவர், பின்னர் 2001.06.28 தொடக்கம் 2012 வரை அம்பாரை மாவட்டத்தில் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் உதவி திட்டமிடல் பணிப்பாளராக பணியாற்றினார். பின்னர் பிரதி திட்டமிடல் பணிப்பாளராக பதவி உயர்வு பெற்று 2012 தொடக்கம் 2018 வரை களுவாஞ்சிக்குடி பிரதேச செயலகத்தில் கடமையாற்றி வந்தார்.

இதன் பின்னர் 2018.07.05ம் திகதி அன்று மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளராக பதவி உயர்வு பெற்று 2022.01.23 வரை மாவட்ட செயலகத்தில் பணியாற்றி மீண்டும் பதவி உயர்வு பெற்று இலங்கை சமுர்த்தி திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக 2022.01.24 அன்று தனது கடமையை கொழும்பில் பொறுப்பேற்கவுள்ளார்.

ஆசிரியராக தன் சேவையை தொடங்கிய இவர் இலங்கை திட்டமிடல் பிரிவில் உதவி திட்டமிடல் பணிப்பாளராகவும், பிரதி திட்டமிடல் பணிப்பாளராகவும் சமுர்த்தி திணைக்களத்தில் சமுர்த்தி பணிப்பாளராகவும் கடமையாற்றி தற்போது சமுர்த்தி மேலதிக பணிப்பாளர் நாயகமாக பதவி உயர்வு பெற்று தன் கடமையை நேர்மையாகவும், சிறப்பாகவும் மற்றவர்களுக்கு உதாரணமாகவும் செயற்பட்ட ஒரு சிறந்த சேவையாளர் ஆவார்.

கிழக்கு பல்கலை கழகத்தில் 1988.05.01ல் கணித விஞ்ஞான முதல்தர சிறப்பு பட்டதாரியான இவர் தற்போது இலங்கை திட்டமிடல் சேவையின் விசேட தரத்தினை Sri Lanka Planning Service S.L.P.S (Super Gerad) 2018ம் ஆண்டில் பெற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது. இவர் மேலதிக பயிற்சிகளை பெற்றுக் கொள்ளும் பொருட்டு தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளுக்கு விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.

மட்டக்களப்பு, அம்பாரை மாவட்டங்களில் சுமார் 31 வருடங்களாக தம் சேவையை மிகச்சிறப்பாக வழங்கி வந்த இவர் கிழக்கு மண்ணிற்கு பெருமை சேர்த்துள்ளார்

Related posts