மட்டக்களப்பு வலயத்திற்குற்கு 70 பட்டதாரி பயிலுநர்கள் பாடசாலைக்கு இணைப்பு.



பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சி திட்டத்தின்கீழ் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டுள்ள பயிலுநர்களுக்கு பயிற்சித் திட்டத்திற்காக அரசசேவையில் இணைத்தல்  மூலம் மட்டக்களப்பு வலயத்திற்குற்கு 70 பட்டதாரி பயிலுநர்கள் பயிற்சிக்காக பாடசாலைக்கு இணைக்கப்பட்டுள்ளார்கள்.

ஆசிரியர் சேவைக்குள் பட்டதாரிகளை உள்ளீர்க்கும் கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவகத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு உள்ளீர்க்கப்பட்ட 70பேருக்கு நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தில் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையினை தீர்க்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் முயற்சியினால் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கு  உள்ளீர்க்கப்பட்ட 70பேருக்கு நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று காலை10.30 மணியளவில்  மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பிரதான ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்தின் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளர்களான திருமதி சு.சரணியா,திருமதி சாமினி ரவிராஜா,உதவி கல்வி பணிப்பாளர் ஜோன் பிரபாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு பயிலுநர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டதுடன் அவர்கள் கடமையாற்றும் பாடசாலைகளின் விபரங்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.

இதன்போது குறித்த பட்டதாரி பயிலுநர்களுக்கான நான்கு நாட்கள் திசைமுகப்படுத்தல் வேலைத்திட்டம்,பாடரீதியான கற்பித்தல் பிரயோகம் வேலைத்திட்டம் இடம்பெறுவதுடன் மாணவர்கள் இழந்த கற்றல் செயற்பாடுகளை மீளக்கட்டியெழுப்புவதற்கு இவ்வாறு இணைக்கப்பட்ட பட்டதாரி பயிலுநர்கள் அர்ப்பணிப்புடனும்,வினைத்திறனுடனும் மட்டக்களப்பு கல்வி வலயத்திற்கு தங்களை மாற்றிக்கொண்டு சேவையாற்ற வேண்டுமென மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி.சுஜாதா குலேந்திரகுமார் கேட்டுக்கொண்டார்.

Related posts