மட்டக்களப்பு வவுனதீவு பிரதேச சிறுபோக விவசாய ஆரம்பக் குழுக் கூட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுனதீவு பிரதேச செயலாளர் பிரிவில் ஆயித்தியமலை, மற்றும் மண்டபத்தடி கமநல சேவை நிலையங்களுக்குட்பட்ட விவசாய நிலங்களில் சிறுபோக பயிற் செய்கை மேற்கொள்வதற்கான ஆரம்பக் கூட்டம் (2021) மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன் தலைமையில் இன்று (04) வவுனதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
 
இதன்போது இப்பிரதேசத்தில் 12 ஆயிரத்தி 832 ஏக்கர் விவசாய நிலங்களில் சிறுபோக பயிற்செய்கை பண்ணப்படுவதற்கான முன் ஆயத்தங்கள், நீர்ப்பாசனம் மற்றும் மானிய உர விநியோகம் தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
 
இவ்விவசாய நிலங்களில் சிறு நீர்ப்பாசன குளங்கள் மூலமாக நீரைப் பெற்றுக் கொள்ளும் 944 ஏக்கர் நிலத்திலும், பிரதான நீர்பாசன வசதியுள்ள 11 ஆயிரத்தி 888 ஏக்கர் நிலத்திலும், மேட்டு நில பயிற்செய்கையானது 31 ஏக்கரிலும் பயிர் செய்கை பண்ணப்படவுள்ளது.
 
இப்பயிர் செய்கை நிலங்களுக்குத் தேவையான உரங்களை தட்டுப்பாடின்றி பெற்றுக் கொடுக்கத் தேவையான நடவடிக்கைகளை ஏற்கனவே மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும் இம்முறை மானியமாக வழங்கப்படும் இரசாயனப் பசளையுடன் சேர்த்து சேதனப் பசளையும் வழங்கப்படவுள்ளது.
 
இது தவிர இம்முறை நெற்செய்கை பண்ணவுள்ள விவசாயிகளிடம் தரப்படுத்தப்பட்ட விதை நெற்களை செய்கை பண்ணுமாறும், மறுபயிர் செய்கை பன்னுவதற்கு ஆர்வமூட்டப்பட்டதுடன், விவசாயிகளினது சந்தேகங்களுக்கான விளக்கங்களும் சம்மந்தப்படப்ட அதிகாரிகளால் வழங்கப்பட்டது.
 
மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலாளர் எஸ். சுதாகர் ஏற்பாட்டில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் சசிகலா புண்ணியமூர்த்தி மத்திய நீர்ப்பாசன பணிப்பாளர் என். நாகராத்தினம், விவசாய விரிவாக்கல் திணைக்கள பிரதி பணிப்பாளர் வீ. பேரின்பராசா, மாவட்ட உரச் செயலக உதவிப் பணிப்பாளர் கே.எல்.எம். சிராஜுதீன், விவசாய காப்புறுதி சபை உதவிப் பணிப்பாளர் எம்.பாஸ்கரன், மாட்ட விவசாய பணிப்பாளர் கலீல் கரடியனாறு விவசாய பயிற்சி நிலைய விவசாய பிரதிப்பணிப்பாளர் ஆர். சிவனேசன், கமநல சேவைகள் திணைக்கள பிரதி ஆணையாளர் கே. ஜெகநாத் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கால்நடை உத்தியோகத்தர்கள், கமநல சேவைகள் திணைக்கள பெரும்பாக உத்தியோகத்தர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

Related posts