‘மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்துக்கு அக்கறையில்லை’

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டுமென்பதில், தேர்தல் திணைக்களம் அக்கறை காட்டினாலும்கூட அரசாங்கம் எந்த அக்கரையும் எடுக்கவில்லையென, இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளரும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான கி.துரைராஜசிங்கம் குற்றஞ்சாட்டினார்.

ஒரு பொறிமுறையின் கீழ், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை, ஜனாதிபதியும் பிரதமரும் மேற்கொள்ளவேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.

மட்டக்களப்பு, வீரசிங்கம் சதுக்கத்தில் இன்று (08) காலை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

அங்கு அவர் தொடர்ந்துரையாற்றுகையில், கிழக்கு மாகாணசபை கலைக்கப்பட்டு ஒரு வருடமும் 04 மாதங்களும் கடந்துள்ள நிலையிலும் கூட, மாகாண சபைத் தேர்தல் தொடர்பான சரியான முடிவு இன்னும் வெளியிடப்படவில்லையெனச் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், 37 உறுப்பினர்களைக்கொண்டு ஆளப்படும் மாகாணத்தை, தனியொரு ஆளுநரின் கைகளில் வழங்குவது என்பது மக்களின் அதிகாரங்களையெல்லாம் ஒருவரிடம் வழங்கும் செயற்பாடாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில், மாகாண சபைத் தேர்தல் நடைபெறவேண்டுமெனத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதாகவும் அதற்கான சட்டமூலங்கள் உடனடியாக செயற்பாட்டுக்கு கொண்டுவரப்படவேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், தமது சட்டத்தரணிகளது ஆலோசனைகளையும் வழங்குவதற்குத் தாம் தயாராகவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

Related posts