மைதானத்திற்கு குறுக்காக கார்ப்பட் வீதியா?வேண்டாம் என மக்கள் போர்க்கொடி: வீதிஇடைநிறுத்தம்!

கல்முனை தமிழ்ப்பிரிவிலுள்ள மைதானத்தை கபளீகரம் செய்யும் நோக்கில் மைதானத்திற்கு குறுக்காக கார்ப்பட் வீதியமைக்க முயற்சிசெய்வதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லையென அங்குள்ள பொதுமக்களும் பொதுஅமைப்புகளும் போர்க்கொடி தூக்கியுள்ளன.
 
 கல்முனை தொடக்கம் மருதமுனை வரை கடலோரமாக கார்ப்பட்வீதியமைக்கும் சிறப்பான பணியை பொதுஜனமுன்னணியின் அமைப்பாளர் றிஸ்லிமுஸ்தபா முன்னெடுத்துவருகிறார்.
 
இதன்போது, கல்முனை தமிழ்ப்பிரதேசத்தில் இவ்வீதியமைக்கப்படும்போது அங்குள்ள ஒரேயொரு விளையாட்டுமைதானத்திற்கு குறுக்காக வீதியமையும் வண்ணம் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான முதல்கட்டவேலைகளும் நடைபெற்றுவருகின்றவேளையில் பொதுமக்களின் எதிர்ப்பலை தொடங்கியுள்ளது.
 
பொதுஜனமுன்னணியின் அமைப்பாளர் றிஸ்லிமுஸ்தபா  முதன்முதலாக இத்திட்டம் பற்றி கலந்துரையாடிய கூட்டத்தில் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் மைதானத்திற்கு பாதகமில்லாதவகையில் வீதியமைக்கப்படவேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
 
மைதானத்திற்கு பாதிப்பில்லாதவகையில் மைதானத்திற்கு கிழக்காக வீதியை அமைக்குமாறு பொதுநல அமைப்புகள் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன், சைனிங் விளையாட்டுக்கழக்கத்தினர் ,பொதுமக்கள் என பலதரப்பினரும் வேண்டுகோள்விடுத்து எதிர்ப்பை பலகூட்டங்களிலும் தெரிவித்திருந்தனர்.
 
எனினும் வீதிஅபிவிருத்தி அதிகாரசபை அதற்கான திட்டமிடலின்போது குறித்தவீதி மைதானத்திற்கு குறுக்காக வரும்வகையில் திட்டமிட்டிருந்தனர். இதனையறிந்த பொதுஅமைப்புகள் தமது எதிர்ப்புகளை பல தடவைகள் தெரிவித்துவந்தனர்.
 
இறுதியாக, வீதிஅபிவிருத்தி அதிகாரசபை உயரதிகாரிகள் கடந்தவாரம் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் ,சைனிங் விளையாட்டுக்கழகத்தினர்,பொதுமக்களெல்லாம் சேர்ந்து மைதானத்தில் ஒரு சந்திப்பை நடாத்தியிருந்தனர்.
 
அங்கு மக்கள் ‘மைதானத்திற்கு குறுக்காக வீதி என்றால் எமக்கு வீதி தேவையில்லை. மைதானத்தை தவிர்த்து போடுவதானால்போடுங்கள்.’ என்று தமது குரலை எழுப்பினர்.
 
பதிலுக்கு, வீதிஅபிவிருத்தி அதிகாரசபையினர் பழையவீதி செல்லும் தடத்திலேதான் பாதை அமைக்கமுடியும் அதேவேளை கடலுக்கு அருகாமையில்அமைக்கமுடியாது என்று கூறினர்.
 
பாண்டிருப்பு ,கல்முனை போன்ற பல இடங்களில் இதனைவிட குறைவான கடல்தூரமுள்ள கடலரிப்பு அதிகமுள்ள இடங்களில் பாதை அமைக்கப்பட்டுகிறதே,: அதுமட்டுமல்ல கல்முனை முகாமிற்குபின்புறம் கடலோரமாக புதியபாதை அமைக்கப்படுகிறதே அவையெல்லாம் உங்கள் திட்டமிடலில்  இல்லையா? என கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் பொறியியலாளரிடம் கேள்வியெழுப்பினார்.
 
எனினும் வீ.அ.அ.சபையினர்  தமது பிடியில் விடாப்பிடியாக இருந்தகாரணத்தினால் அந்தப்பகுதியில் மாத்திரம் தற்சமயம் வீதியமைக்கும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
 
கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் இதுவிடயம் பற்றிக்கூறுகையில்:
கல்முனை 1ஆம், 2ஆம், 3ஆம் பிரிவுகளுக்கான ஒரேயொரு விளையாட்டுமைதானம் இது. சுனாமிக்கு முன்னர் கல்முனை மாமாங்க வித்தியாலயமும் அதன் மைதானமும் அமைந்திருந்த பிரதேசம் இது.கடற்கரையருகே அமைந்திருந்த காரணத்தினால் சுனாமியினால் பாடசாலை முற்றாக சேதமடைந்து பிறிதொரு இடத்தில் அமைக்கப்பட்டு பாடசாலை இயங்கிவருகிறது. பாதிக்கப்பட்ட மைதானத்தை, சைனிங் விளையாட்டுக்கழகத்தினர் பொறுப்பெடுத்து புனரமைத்து இன்று இளைஞர்கள் பொழுதுபோக்கிற்கு விளையாடும் களமாகவுள்ளது.இதனை வீதிக்காக விட்டுக்கொடுக்கமுடியாது.இளைஞர்கள் விளையாடாமல், போதைவஸ்துவிற்கு அடிமையாகி,முழுச்சமுகமும் குட்டிச்சுவராகவேண்டும் என்று எண்ணுகிறார்கள் போல. அதற்கு ஒருபோதும் அனுமதிக்கமுடியாது.
 இன்றையஇளைஞர்களினதும் நாளையசந்ததியினரின தும் பழிச்சொல்லை இவ்வட்டாரப்பிரதிநிதி என்றவகையில் நான் சுமக்கவேண்டிவரும்.வீதி இல்லாவிட்டாலும் பரவாயில்லை இருக்கின்ற ஒரேயொரு மைதானத்தை ஒருபோதும் இழக்கமுடியாது.என்றார்.

Related posts