மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் பலி

மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பதுளை வீதி கொடுவாமடுவில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் பதுளைவீதி வழியாக நேற்று (திங்கட்கிழமை) இரவு 10 மணியளவில் செங்கலடி நோக்கி பயணித்துள்ளனர்.

இதன்போது கொடுவாமடு எனும் பகுதியில் சருகுபுலி எனப்படும் புலி இனத்தைச் சேர்ந்த விலங்கு திடீரென வீதியைக் கடக்க முற்பட்டுள்ளது.

இதன் காரணமாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் சருகுபுலியை மோதியதுடன், தடம்புரண்டு வீதி மருங்கிலிருந்த கல்லில் மோதியுள்ளது. இதனையடுத்து குறித்த இரு இளைஞர்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மோட்டார் சைக்கிளில் மோதுண்ட சருகுபுலியும் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளது.

இந்த விபத்தில் செங்கலடி கணபதி நகரைச் சேர்ந்த பேரின்பராசா ஜெயரூபன் (வயது 19), கௌரீஸ்வரன் விதுஷ‪ன் (வயது 20) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞர்களின் சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து கரடியனாறு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

Related posts