வட்டுக்கோட்டையில் வயோதிபப் பெண் மீது துஷ்பிரயோகம்! – பணமும் கொள்ளை

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பகுதியில் 59 வயதான பெண்ணொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளர். அவரது நகைகளும் கொள்ளையிடப்பட்டுள்ளன.

நேற்று (சனிக்கிழமை) அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று அதிகாலை 1 மணியளவில் வீட்டின் கூரையை பிரித்துக்கொண்டு நுழைந்த இரு கொள்ளையர்கள் இந்த நாசகார செயலை செய்துவிட்டுச் சென்றுள்ளனர்.

வீட்டில் கணவனும் மனைவியும் மாத்திரமே வசித்து வந்ததோடு, கணவன் சுகயீனமடைந்துள்ளார். இந்நிலையில், கணவனை கட்டிப்போட்டு, மனைவியை தாக்கி, அவரது 20 பவுண் நகைகளை பிடிங்கிக்கொண்டு, துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திவிட்டுச் சென்றுள்ளனர். வீட்டில் காணப்பட்ட சகல பொருட்களையும் இழுத்து தள்ளிவிட்டும் சென்றுள்ளனர்.

மருத்துவப் பரிசோதனையில், கொள்ளையர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுழிபுரம் பகுதியில் சிறுமியொருவர் கடந்த வாரம் படுகொலை செய்யப்பட்டமைக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுந்துள்ளனர். தமிழர் தாயகமெங்கும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. அதற்கு மத்தியில் இவ்வாறான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளமையானது பிரதேசத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, பாதிக்கப்பட்ட பெண் கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் போட்டியிட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts