விமர்சனங்களை செய்கின்ற போது அழகாகவும் கண்ணியமாகவும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்

நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றோம் இந்தப் பிரதேசத்தில் இருக்கின்ற முகநூல் குஞ்சுகள் மிகவும் மோசமான வார்த்தைப் பிரயோகங்களைக் கொண்டு மற்றவர்களை விமர்சனம் செய்துகொண்டிருக்கிறார்கள் என மீன்பிடி நீரியல் வளங்கள் அபிவிருத்தி கிராமிய பொருளாதார பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

புதிய அமைச்சை பொறுப்பேற்றுக் கொண்ட பிரதியமைர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களை வரவேற்கும் நிகழ்வும் விருந்துபசாரமும் (12)ம் திகதி சனிக்கிழமை பொத்தானை கழுவாமடுவில் இடம்பெற்ற போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் அங்கு பேசுகையில்,

முகநூலில் என்னைப்பற்றி எழுதுவதாக இருந்தாலும் சரிதான் அல்லது எனது சார்பிலே எழுதுவதாக இருந்தாலும் சரிதான் அது உங்களுடைய ஜனநாயக உரிமை அதை நான் மறுக்கவில்லை ஆனால் தயவுசெய்து வார்த்தைப் பிரயோகங்களை மிகவும் அழகாகவும், கண்ணியமாகவும் நீங்கள் வைத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறான செயற்பாடுகள் எனக்கு நல்லவிடயமாக படவில்லை.

அந்தவகையிலே எனது அருமை முகநூல் குஞ்சுகள் எதிர்காலத்தில் உங்களுடைய விமர்சனங்களை செய்கின்ற போது அது மோசமாக இருந்தாலும் அல்லது நல்லதாக இருந்தாலும் வார்த்தைப் பிரயோகங்களை மிகவும் அழகான முறையில் மற்றவர்கள், மற்ற சமூகத்தவர்கள், மற்றப் பிரதேசத்தவர்கள் அழகாக வாசித்து அதை உணரக்கூடிய வகையிலேயே கெளரவமான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று நான் இந்த இடத்திலே வினயமாக வேண்டுகோள் விடுக்கிறேன்.

எனக்கு இன்னுமொரு அமைச்சு தரப்பட்டிருக்கிறது எனவே கடந்த காலத்தில் நாங்கள் இந்த சமூகத்திக்கு எந்தப் பணியை செய்தோமோ அந்தப் பணியை தொடர்ந்தும் செய்யவிருக்கிறோம் அந்தவகையில் எதிர்காலத்தில் நாங்கள் இந்த அமைச்சின் ஊடாக இந்த மாவட்டத்திலும் விசேடமாக வடகிழக்கு பிரதேசத்திலும் இருக்கின்ற மீன்பிடி சமூகத்தினுடைய எதிர்பார்ப்புக்களையும், அவர்களுடைய வேண்டுதல்களையும், நாங்கள் நல்லமுறையில் திட்டமிட்டு அவசரமாக செய்யவேண்டிய விடயங்கள், திட்டமிட்டு செய்யவேண்டிய விடயங்கள் போன்றவற்றை கருத்தில் கொண்டு நாங்கள் செயட்படவிருக்கின்றோம் என தனதுரையில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts